PUBLISHED ON : மே 30, 2020

அன்புள்ள பிளாரன்ஸ் அம்மா...
நான், எம்.பி.ஏ., படிப்பு முடித்துள்ள பெண்; படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள்; அப்பா கிடையாது. பட்டாசு தயாரிக்கும் வேலை பார்க்கிறார் அம்மா. அரசு துறையில் வனக்காப்பாளராக வேலைக்கு முயற்சி செய்கிறேன்.
குடும்பத்தில் மூத்தவளான எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னை திருமணம் முடிக்க கட்டாயப்படுத்துகிறார் அம்மா.
அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்; என் தங்கைக்கும், நல் வாழ்க்கை அமைத்து தர வேண்டும். இதை எல்லாம் சொல்லியும், உறவினர்கள், திருமணத்துக்கு கட்டாயப்படுத்துகின்றனர்.
என் கனவை அடைவதில், பிடிவாதமாக இருக்கிறேன்; இயற்கை வளங்களை காக்கும் துறையில் வேலை பார்க்க வேண்டும். தந்தை ஸ்தானத்தில் இருந்து குடும்பத்துக்கு உதவ வேண்டும். இவற்றை நிறைவேற்ற என்ன செய்றது... என் வாழ்க்கை லட்சியம் நிறைவேற, நல்ல பதில் சொல்லுங்க தாயே.
அன்பு மகளே...
உனக்கு, இரண்டு குறிக்கோள்கள் உள்ளன.
ஒன்று: இயற்கை வளங்களை பாதுகாக்கும் வன அதிகாரியாக பணிபுரிவது.
இரண்டு: தந்தை ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை பராமரித்து, தங்கைக்கு நல்வாழ்வு அளிப்பது...
வன அதிகாரியாக பணியாற்ற தேவைப்படும் தகுதி விவரங்களைப் பார்ப்போம்...
மனிதவள மேலாண்மை நிர்வாகத்தில், முதுகலை பட்டம் பெற்றுள்ளாய் நீ; வன அதிகாரி பணிக்குரிய தகுதி தேர்வு எழுத, அடிப்படையாக, இயற்பியல், ரசாயனவியல், தாவரவியல், விலங்கியல், கணக்கு, புவியியல், புள்ளியியல், கால்நடை மருத்துவம், விவசாயம், பொதுமருத்துவம் போன்ற, 22 அறிவியல் பாடபிரிவுகளில் ஒன்றில், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முதல் கட்ட தேர்வை, 21 வயது முதல், 32 வயதுக்குள் எழுதலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, மூன்று ஆண்டுகள் வயது விதிவிலக்கும், அட்டவணை வகுப்பினருக்கு, ஐந்து ஆண்டுகள் வயது விதிவிலக்கும் உண்டு.
முதல் கட்ட தேர்வில், இரு தாள்களில், 450 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இரண்டாவது தாள், அறிவியல் பிரிவுகளில், ஏதாவது ஒரு பாடதிட்டத்தை ஒட்டி இருக்கும். இவற்றில் தேர்வானால், அடுத்து, ஐந்து தாள்கள், 1,400 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும்.
இவற்றில் தேர்வானால், நேர்காணலில் பங்கேற்க வேண்டும்; நேர்காணலில் வெற்றி பெறுவோருக்கு, உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன், இந்திரா காந்தி நேஷனல் பாரஸ்ட் அகாடமி நிறுவனத்தில் பயிற்சி கொடுக்கப்படும்; பின், பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இளங்கலை அறிவியல் படிக்காமல், இளங்கலை மேலாண்மை நிர்வாகம் தான் படித்திருக்கிறாய் என்றால் பிரச்னையில்லை; அந்த கல்வித்தகுதிக்குரிய பணியை தேடலாம்.
கடிதத்தில், உன் தங்கை என்ன படிக்கிறாள் என்பதை தெரியபடுத்தவில்லை; பணிக்குச் சென்று, கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், பட்டாசு தயாரிக்கும் பணிக்கு அம்மா செல்வதை நிறுத்து.
ஒரு ஐந்தாண்டு திட்டத்தை கையில் எடுத்துக்கொள்.
உன் தாயின் பெயரில், வங்கியில் கணக்கு ஆரம்பித்து, குறிப்பிட்ட தொகையை சேமித்து வா; மாதம், 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் கூட, 60 மாதத்தில், 6 லட்சம் ரூபாய் உன் அம்மாவின் கணக்கில் சேரும்.
ஆறு லட்சத்துக்கு, வங்கி வட்டி, 4,000 ரூபாய் வரும்; அது, உன் அம்மாவின் கை செலவுக்கு உதவும்.
உன் தங்கை விரும்பியதை படிக்க வை; ஐந்து ஆண்டில் படிப்பு முடிந்து, அவளும் வேலைக்குச் சென்று விடுவாள்.
'என் குடும்பத்தை திருமணத்திற்கு பின்னும் பராமரிப்பேன்; அதை கணவராகிய நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன், திருமணம் செய்து கொள். திருமணத்திற்குப் பின், அம்மாவை, உன் பராமரிப்பில் வைத்திரு.
அம்மாவின் சிறு ஆசைகளை நிறைவேற்று; ஐ.ஆர்.டி.சி., நடத்தும், ஆன்மிக சுற்றுலாக்களுக்கு அனுப்பி வை; தங்கைக்கு தகுந்த வரன் பார்த்து திருமணம் செய்து வை.
ஒரு விஷத்தை மனதில் கொள். இதை செய்ய வேண்டும்; அதை செய்ய வேண்டும் என, வானத்தில் பறக்காதே; உனக்கான தேவைகளை பூர்த்தி செய்து, பொதுநலத்தை கவனி.
லட்சியத்தை ஒரே புள்ளியில் நின்று பிடிவாதமாக யோசிக்காதே; அதற்கான மாற்றையும் அவதானித்து வை. ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
தந்தையுமானவளே... என் கோடி நமஸ்காரம்!
- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.
