PUBLISHED ON : ஜூன் 27, 2020

அன்புமிக்க தாய் பிளாரான்சுக்கு...
இளங்கலை, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நான். பாடங்களை நன்றாக படிப்பேன்; கதை எழுதுவேன்; உதவி செய்யும் மனப்பான்மை அதிகம்.
பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, பலமுறை என் மதிய உணவை கொடுத்திருக்கிறேன்; முதியவர்கள் பணம் கேட்டால், சேமித்த தொகையை தயங்காமல் வழங்கி விடுவேன்.
எல்லாருக்கும் உதவணும்; அதற்காக ஒரு வேலைக்கு போகணும்; படிக்கும் போதே, நான் எழுதும் கதைகள், இதழ்களில் வெளிவரணும். அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.
எழுதும் புத்தகத்தை எப்படி வெளியிட வேண்டும். கதைகள் இதழ்களில் வெளிவர என்ன செய்யணும் என்று சொல்லுங்கள். அதில் கிடைக்கும் பணத்தால், ஏழைகளுக்கு உதவ விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா.
அன்பு மகளுக்கு...
எழுத்தாளர் ஆவதற்கு குறுக்கு வழிகள் இல்லவே இல்லை. நல்ல வாசகியாக இருந்தால், சிறந்த எழுத்தாளராக முடியும். ஒரு மாடு எவ்வளவு வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை தின்கிறதோ, அதில் உள்ள சத்துக்களுக்கு ஏற்ப பால் கறக்கும். கணினியில், 'இன்புட்' கொடுக்கும் அளவில் தான், 'அவுட்புட்' கிடைக்கும். இதை முதலில் உணர்ந்து கொள்.
கீழ்க்கண்டவற்றை பின்பற்றி பயிற்சிகள் செய்தால், வாழ்வில் உயர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்; நல்ல எழுத்தாளராகவும் உயர்வு பெறுவாய் மகளே...
* தினமும், ஒரு தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாளை வாசி; விலைக்கு வாங்க வசதி இல்லை என்றால், நுாலகம் சென்று வாசிக்கலாம். தமிழகத்தில் பொது நுாலகங்கள் எல்லா பகுதிகளிலும் உள்ளன
* வீட்டுக்கு அருகே வாடகை நுாலகம் இருந்தால் உறுப்பினராக சேரலாம்; உனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில், 50 பேர்; கட்டுரையாளர்களில், 50 பேர்; கவிஞர்களில், 50 பேர் என, பட்டியலாக தயாரித்துக் கொள்; அவர்களின் புத்தகங்களை முறை வைத்து வாசித்து, டயரியில் விமர்சனங்கள் எழுத பழகு
* தினமும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, நாட்குறிப்பாக எழுதி பழகு; இப்படி எழுதுவதால் சிறப்பு மிக்க எழுந்து நடை ஒன்று உருவாகும்
* நாட்டின் அரசியல், பொருளாதாரம், கலை, இசை, ஓவியம், நாடகம், சினிமா போன்றவற்றை கூர்மையாக கவனித்து, அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்
* பிறருக்கு நடக்கும் துன்பங்களை உனக்கு நேர்ந்ததாக பாவித்து உருகு; ஆஸ்திரேலிய காட்டுத் தீயில், மிருகங்கள் கருகினால், கருகின மிருகங்களில் ஒன்றாக உன்னை நினைத்து, அந்த வலியை அனுபவி
* எழுத்தில் மையல் கொண்டு, படிப்பை தொலைத்து விடாதே; எழுத்தை, இடது கண்ணாகவும், படிப்பை வலது கண்ணாகவும் கற்பனை செய்; இளங்கலையில், என்ன பாடப்பிரிவை எடுத்திருக்கிறாய் என்பதை கடிதத்தில் குறிப்பிடவில்லை. உன் புத்தக வாசிப்புதிறன் பாடபுத்தகங்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும்
* முதுகலை பட்டப் படிப்பையும் முடிக்க உறுதி கொள். இளங்கலை பட்டப் படிப்பை முடித்தவுடன், அரசு, வங்கிக்கான போட்டித் தேர்வுகளை எழுதத் துவங்கு
* சிறுகதை எழுத ஒரு இலக்கணமில்லாத இலக்கணம் தேவைப்படும்; நல்ல சிறுகதை எழுதுவது, ட்வென்டி ட்வென்டி மேட்ச்சில், 50 ரன் அடித்து, அணியின் வெற்றிக்கு அடிகோலுவது போலானது. கதையில், 'டாக்குமென்டரி'தனம், 10 சதவீதமும், கதைதனம், 90 சதவீதமும் இருக்க வேண்டும்
* கதையில், தகுந்த இடங்களில், ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் போன்ற நிறுத்தற் குறியீடுகளை முறையாக பயன்படுத்த கற்றுக்கொள். உரையாடல், பேச்சு மொழியிலும், வர்ணனைகள் எழுத்து மொழியிலும் இருத்தல் நலம்
* கதையின் முடிவில், எதிர்பாராத திருப்பம் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, அமெரிக்க சிறுகதை எழுத்தாளர், ஓ ஹென்றி எழுதியுள்ள கதைகளையும், தமிழில், பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ள கதைகளையும் படித்தால், இது புரியும்
* தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்க, வாரம், 50 கதைகள் தேவை என்றால், 5,000 கதைகள் வருகின்றன. ஒவ்வொரு பத்திரிகையின் விருப்பமும், தேவையும் வேறு வேறாக இருக்கின்றன.
* எனக்கு தெரிந்து, தினமலர் - வாரமலர் இதழில் தான், சிறுகதைக்கு, ரூ.2,500 சன்மானம் தருகின்றனர். சில பத்திரிகைகளில், 1,000, 500 தான் கிடைக்கும்; இன்னும் சில, 10 காசு கூட தருவதில்லை
* தினமலர் - வாரமலர் இதழில் ஆண்டிற்கு, ஆறு கதைகள் அதிகபட்சம் பிரசுரமாகும்; இதன்மூலம், 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கணக்குப் போடலாம். இதை வைத்து, யாருக்கு என்ன உதவி செய்வாய். எதாவது ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு, ஆண்டிற்கு, 10 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக தரலாம்
* பதிப்பகங்கள், பிரபல எழுத்தாளர்களுக்கு கூட, சரிவர, 'ராயல்டி' என்ற சன்மானத்தொகை கொடுப்பதில்லை; புதிய எழுத்தாளர் புத்தகம் போட்டால், எழுதியவர் தான் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே முதலில் நன்றாக படித்து, ஒரு பணியில் சேர முயற்சி செய்
* கதை எழுதி கிடைக்கும் பணத்தில் தான் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது இல்லை. பணியில் கிடைக்கும் சம்பளத்தை வாழ்வதற்கும், உதவுவதற்கும் பயன்படுத்தலாம்
* எழுதுவதால் கிடைக்கும் சந்தோஷம், ஆன்மாவை புத்துயிர்ப்பாக வைத்திருக்கும். சிக்கலற்ற வழியில் முயன்று வாழ்வை சிறப்பாக உருவாக்கு.
எந்த வழியில் உபரி வருமானம் கிடைத்தாலும், ஏழைகள் நலனுக்காக மடைமாற்ற சபதம் எடுத்துக் கொள்; வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகி புகழ் பெற இதயம் கனிந்த வாழ்த்துகள்!
- கொட்டும் அன்புடன், பிளாரன்ஸ்.
