
அன்பு மிக்க பிளாரன்ஸ்...
என் வயது, 42; குடும்பத்தலைவியாக இருக்கிறேன். இரு குழந்தைகள்; மூத்தவளுக்கு வயது, 15; 10ம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி; அலங்காரம் செய்து கொள்வதில், மிகுந்த ஆர்வம் உடையவள். கை, கால் நகங்களை சீராக வெட்டி, பல வண்ணங்களில், நகப்பூச்சு போட்டு கொள்வாள்.
இரண்டாவதாக மகன், 5ம் வகுப்பு படிக்கிறான்; எல்லாவற்றிலும், அக்காவை காப்பியடிப்பான்.
மாதத்திற்கு ஒருமுறை, கைகளில் மருதாணி போட்டு கொள்வாள் மகள்; அது போல், 'நகப்பூச்சாக மருதாணி போட்டுக் கொள்வேன்; தலை முடிக்கு வண்ணமும், இடது காதில் கடுக்கனும் அணிவேன்...' என அடம்பிடிக்கிறான்.
எல்லாரும் கிண்டல் செய்வர் என கூறினால், கேட்க மறுக்கிறான்; அவனது ஆசை சரியானதா என்பதை கூறுங்கள்.
அன்புள்ள அம்மா...
இந்த, கோவிட் - 19, பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண்களில் பலர், நகப்பூச்சும், மருதாணியும் போட்டுக் கொள்கின்றனர். சினிமா நடிகர்கள், முக அலங்காரம் செய்யும் போது, கண்ணுக்கு மையும், உதட்டுக்கு சாயமும் பூசிக் கொள்கின்றனர்.
ஆண்களில், இரண்டு வகை உள்ளனர். ஒரு வகையினர், பனியன் அணிய மாட்டார்கள்; ஒரு பிரிவினர், பிரேஸ் லெட், மைனர் செயின், கை கடிகாரம், மோதிரம் அணிந்து, நடமாடும் நகைக்கடையாக திகழ்வர்; கேட்டால், 'ஆண்மைக்கு ஆண்மை சேர்க்கிறோம்...' என்பர்.
கடந்த காலத்தில், நகப்பூச்சு, உதட்டுசாயம், மருதாணி, காதணி அணிவது போன்றவை, பெண்களுக்கு உரியதாக கருதப்பட்டன. அந்த பழக்க வழக்கங்களுக்கு எதிராக கலகம் செய்து, அவற்றை தனக்குரியதாக மாற்றிக்கொள்ள துடிப்பது நவீன ஆணின் குறிக்கோள் என்கிறார், ஒரு பேஷன் டிசைனர்.
நகப்பூச்சு போடுவோரின் குணநலன்களை ஏழு வகையாக பிரிக்கின்றனர் நிபுணர்கள்.
* நீலநிற நகப்பூச்சு போட்டு கொள்வோர் படைப்பாற்றல் மிக்கவர்கள்
* ஆரஞ்சு நிற நகப்பூச்சு போட்டு கொள்வோர் தன்னிச்சையானவர்கள்
* கருப்பு நிறம் போட்டு கொள்வோர் தனித்துவ ஆளுமை உள்ளவர்கள்
* சிவப்பு நகப்பூச்சு போட்டு கொள்பவர்கள் கச்சிதமான உடலமைப்பு பெற்றவர்கள்
* பிங்க் நிற நகப்பூச்சு போட்டு கொள்வோருக்கு பெண்மை ததும்பும்
* வெள்ளை நிறம் போடுபவர்கள் இளமையானவர்கள்.
சிலர் இடது கைக்கு நகப்பூச்சும், இடது உள்ளங்கைக்கு மருதாணியும் வைத்து, ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்து நிற்பர்.
மகனை, 'இதே மாதிரி நகப்பூச்சாக மருதாணி வைத்துக் கொள்...' என கூறு. மருதாணி வைத்துக்கொள்வது பிறர் கண்களை உறுத்தாது.
பொதுவாக, 15 முதல் 19 வயதுள்ள ஆண்கள், பழக்கவழக்கத்தில் நிலையின்றி ஆடுவர்; 20 வயதுக்கு மேல் பெண்களை கவர என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் விரும்பி செய்வர்.
தலையில் செயற்கை சாயம் பூசிய, காதில் ஒற்றை கடுக்கண் அணிந்த, நகப்பூச்சு போடும் ஆண்களை, 99 சதவீத பெண்களுக்கு அறவே பிடிக்காது.
குறிப்பிட்ட வயதுக்குப் பின், நீங்களே விரும்பினாலும் நகப்பூச்சு, மருதாணி போட மாட்டான் மகன். அதுவரை பொறுத்திருக்கவும்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

