PUBLISHED ON : ஜூன் 10, 2023

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 10ம் வகுப்பு படித்த போது, உடற்கல்வி ஆசிரியராக இருந்தார் எஸ்.சுப்பிரமணியன். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போருக்கு பிரத்யேக பயிற்சி அளித்து வந்தார்.
மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து, சிறிய வேலைகள் வழங்கியிருந்தார்.
நான், கபடி விளையாட்டு பிரிவில் பயிற்சி பெற்று வந்தேன். ஆசிரியருக்கு தெரியாமல், வேறு பிரிவினருக்கு உதவியாக விளையாட்டு மைதானத்தில் வேலைகள் செய்து வந்தேன்.
ஒருநாள் மைதானத்தை சமன் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அதற்காக உருளையை இழுத்த போது வழுக்கி விழுந்து விட்டேன். அது தெரியாமல் மற்றொரு உருளையை உருட்டினர் மாணவர்கள். தவறுதலாக அது, என் மீது ஏற இருந்தது. அதை கண்ட ஓவிய ஆசிரியர் ஆறுமுகம் ஓடி வந்து தடுத்து, துாக்கி என்னை காப்பாற்றினார்.
எனக்கு, 60 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் உயிரை காப்பாற்றிய அந்த ஆசிரியரை நினைவில் கொண்டுள்ளேன். என் வாழ்வில் அது மறக்க முடியாத சம்பவமாகிவிட்டது!
- எஸ்.ஜோதிப்பாண்டி, சிவகங்கை.
தொடர்புக்கு: 89252 65443
