PUBLISHED ON : மே 14, 2022

விருதுநகர், ஷத்திரிய வித்யாசாலா பள்ளியில், 1982ல், 9ம் வகுப்பு படித்த போது, தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவேன். இதற்கு ஒரு தவறான யுத்தியைக் கையாண்டு வந்தேன்.
அதாவது, தேர்வின் போது, விடைத்தாளில் நன்றாக தெரிந்த ஒரே கேள்விக்கு, இரண்டு முறை, வெவ்வேறு இடத்தில் பதில் எழுதி வைப்பேன். விடைத்தாளை திருத்தும் போது, இரண்டுக்கும் மதிப்பெண் விழுந்து விடும்.
அரையாண்டுத் தேர்வில் தமிழ் பாடத்தில், இதே யுத்தியைக் கையாண்டிருந்தேன். தமிழ் ஆசிரியர் யுகபாரதி, திருட்டுத் தனத்தை கண்டுபிடித்து, வகுப்பு ஆசிரியர் பொன்னையாவிடம் தெரிவித்தார்.
அவர் விடைத்தாள்களை சரி பார்த்து, 'பளார்' என கன்னத்தில் அறைந்து, 'வெளியே போ... பள்ளியில் இனி உனக்கு இடம் இல்லை...' என, கோபத்தில் துரத்தினார்.
இதைக் கண்ட தமிழாசிரியர், 'தண்டித்தால் அவன் எதிர்காலம் வீணாகி விடும்... தவறு செய்தவனை, அறிவுரையால் திருத்தி நல்வழி படுத்தலாம்...' என பரிந்துரைத்து, படிப்பு தொடர உதவினார்.
எனக்கு தற்போது வயது, 53; சொந்தமாக தொழில் நடத்தி வருகிறேன். பள்ளி பருவத்தில் செய்த தவறை மன்னித்து உதவிய அந்த ஆசிரியரை எண்ணியதும் நெகிழ்ந்து விடுகிறது மனம்.
- ஆர்.ஆனந்த், விருதுநகர்.
தொடர்புக்கு: 90477 15160
