PUBLISHED ON : ஜூலை 29, 2023

கடலுார் மாவட்டம், சிதம்பரம், ராமசாமி செட்டியார் உயர்நிலைப் பள்ளியில், 1955ல், 10ம் வகுப்பு படித்தபோது, வரலாறு ஆசிரியராக இருந்தார் ராஜகோபால். அன்று வகுப்பில் மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய சமஸ்தான பகுதிகளை, வரைந்து அடையாளப்படுத்த கூறினார்.
இன்று போல், அச்சிட்ட படங்கள் அப்போது கிடையாது. வெள்ளை தாளில் இந்திய படம் வரைந்து, அரபிக்கடல், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடாவை எல்லைகளாக காட்டினேன். சாம்ராஜ்ய பரப்பை, வண்ண பென்சிலால் தீட்டி சமர்ப்பித்தேன்.
அதை கண்டதும், 'கற்பனை வளத்துடன், அற்புதமாக தயாரித்துள்ளாய். எல்லா மாணவர்களுக்கும் இதை காட்டி வா...' என உற்சாகம் ஊட்டினார்.
அன்று மாலை, என் தந்தையை சந்தித்தவர், 'சிறப்பாக படங்கள் வரையும் வழிமுறையை தெரிந்துள்ளான். இந்த துறையிலே பழக்குங்கள்...' என என்னை பற்றி கூறியிருந்தார். அதை அறிந்ததும், படங்கள் வரைவதில் கூடுதல் கவனம் செலுத்தினேன்.
எனக்கு தற்போது, 83 வயதாகிறது; தமிழக சுகாதாரத்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். ஓவியம் தீட்டுவதை தொடர்கிறேன். பேரன், பேத்தியர் என்னிடம் அபிப்ராயம் கேட்டு, பள்ளியில் வரைந்து நற்பெயர் பெற்றுள்ளனர். இதற்கு துாண்டுதலாக இருந்த ஆசிரியரை வணங்குகிறேன்!
- எஸ்.சுவாமிநாதன், கோவை.
தொடர்புக்கு: 89510 94375
