PUBLISHED ON : ஜூலை 29, 2023

மதுரை, மணிநகரம், எம்.எல்.டபுள்யூ.ஏ.பள்ளியில், 1983ல், 10ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியராக இருந்த தர்மராஜ், ஆங்கில பாடமும் நடத்துவார்.
இலக்கணத்தை எளிமையாக கற்பிப்பார். வண்ண சாக்பீஸ்கள் பயன்படுத்தி கரும்பலகை முகப்பில், 'நேரம் விலை மதிப்பற்றது' போன்ற பொன்மொழிகள் எழுதி விழிப்புணர்வு ஊட்டுவார்.
அன்றன்று வகுப்பில், நடத்தும் பாடத்தில், கடைசி, 10 நிமிடங்கள் கேள்விகள் கேட்பார். பதில் தெரியா விட்டால் இரண்டு காதுகளையும் பிடித்து மேலே துாக்குவார். சிலநேரம் காதுகளில் நகம் அழுத்தி ரத்தம் பீறிடும். இந்த தண்டனையில் இருந்து யாரும் தப்பியதில்லை.
சாக்பீஸ் துாளை முகத்தில் பூசியும் தண்டிப்பார். காலை பள்ளி துவங்குவதற்கு, 1 மணிநேரம் முன்பே, சிறப்பு வகுப்புக்கு வந்திருக்க வேண்டும். தவறினால் தண்டனை உண்டு. இது போல் கண்டிப்பு காட்டி படிப்பறிவை ஊட்டினார்.
கல்லுாரி படிப்பை முடித்த பின், மதுரை, இறையியல் கல்லுாரியில் நடந்த நிகழ்வில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை அறிமுகம் செய்ததும், வகுப்பில் நான் அமர்ந்திருந்த இடம், வீட்டு விலாசம் உள்ளிட்ட விபரங்களை கூறி வியப்பில் ஆழ்த்தினார். என்னை அறியாமலே காதை தொட்டு பார்த்தேன். அதை கவனித்தவர், 'இன்னும் அதை நீ மறக்கவில்லையா...' என்று சிரித்தார்.
என் வயது 58; அரசு அலுவலராக பணியாற்றி வருகிறேன். அந்த தலைமை ஆசிரியர் கற்றுக்கொடுத்த ஒழுக்கங்களை கடைபிடிப்பதால், பணியில் மேன்மை பெற்று சிறப்பாக வாழ்கிறேன்.
- பி.சேதுராஜ், சிவகங்கை.
தொடர்புக்கு: 94447 72931
