PUBLISHED ON : டிச 16, 2011

கெனீஸ் பர்க் என்ற ஊர் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் உள்ளது. அந்த ஊரில் பிறந்தவர்தான் ஆல்பர்ட் சுவைட்சர். ஆல்பர்ட் கல்வியில் சிறந்து விளங்கினார். செயின்ட் தாமஸ் சமயக் கல்லூரியில் முதல்வராகப் பணி ஏற்க அழைப்பு வந்தது.
அப்போது ஆல்பர்ட்டின் வயது 26. சிறு வயதில் கல்லூரியின் முதல்வராகப் பணியேற்றதால், மாணவர்கள் அவரிடம் நெருங்கிப் பழகினர்.
கவுரவமான முதல்வர் பதவியில் ஆல்பர்ட் நீண்ட நாள் நீடிக்கவில்லை. பதவியைத் துறந்து மருத்துவக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார். மருத்துவப் படிப்பை முற்றும் கற்று மருத்துவரானார். எதற்காக மருத்துவ படிப்பை கற்றார்? அதிக வருவாய் ஈட்டவா?
இல்லை. அவர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு சிலையைக் கண்டார். கட்டுக் குலையாத உடலமைப்புக் கொண்ட கறுப்பு இன இளைஞனின் சிலை. இளைஞனின் தலை நிமிர்ந்த நிலையில் இல்லை. வேதனையாலும் அவமானத்தாலும் தாழ்ந்து இருந்தது.
அதைக் கண்ட ஆல்பர்ட் மனம் வருந்தினராம். அப்பொழுதே அந்தப் பிஞ்சு உள்ளத்தில், கறுப்பர் இனத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற உறுதி பிறந்தது. மருத்துவ பட்டம் அதற்காகவே பெற்றார்.
ஹெலன் என்னும் பெயர் கொண்ட பேராசிரியர் மகளைத் துணைக்கு அழைத்தார். ஆப்பிரிக்கா நாட்டு காங்கோ செல்ல திட்டமிட்டார்.
'லேம்பரின்' என்ற பொட்டல் காட்டுப் பகுதியில் மரத் துண்டுகளை இணைத்து மருத்துவமனையை நிறுவினர். விடியற் காலையிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சைத் தொடங்கி விடும். நோயாளிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்தாரும் தங்க குடிசைகள் அமைக்கப்பட்டன. சிகிச்சை இலவசம். உணவும் இலவசம்.
ஆல்பர்ட்டின் அரிய இந்த சேவைக்கு பாராட்டும், புகழும் பண உதவியும் குவிந்தது. மருத்துவர்களும், செவிலியர்களும் அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றினர்.
உலக அமைதிக்காகப் பாடுபட்டார் என்பதற்காக 1952ல் ஆல்பர்ட்டுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அதை நேரில் சென்று வாங்க நார்வே நாட்டு ஆஸ்லோவுக்குச் செல்லவில்லை. காரணம் அந்த நேரத்தில் சில நோளிகளைக் கவனிக்கலாமே என்பதுதான். பரிசு, பணம் அவரைத் தேடி வந்தது. அந்தப் பணத்தைக் கொண்டு தொழுநோயாளிகளுக்குத் தனியாக மருத்துவமனையை உருவாக்கினார்.
துணையாக வந்து பிணியாளர் களுக்குப் பணி விடை ஆற்றிய ஹெலன் ஆல்பர்ட்டின் துணைவியானார். ஆதரவற்ற ஏழை நோயாளிகளுக்கு மரணமே கதி என்ற நிலையை மாற்றி புத்துயிர், புது வாழ்வு கொடுத்த உத்தமர் ஆல்பர்ட் சுவைட்சர். 1965 செப்டம்பர் 4ம் தேதி அமரரானார்.
'எங்கள் தந்தை எங்களைப் விட்டுப் போய் விட்டாரே' என்று கறுப்பு இன மக்கள் கலங்கினர்.
என்ன உத்தமமான இதயம் பாருங்கள்!
***
