
தோட்டத்தில், நிறைய குரங்குகள் இருந்தன; அவை, தோட்டக்காரனுடன் நட்பாகி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சுத்தம் செய்வது என உதவிகள் செய்தன.
ஒரு நாள், வெளியூர் செல்ல புறப்பட்டான் தோட்டக்காரன்.
'தோட்டத்திற்கு, தண்ணீர் விட, யாரை நியமிப்பது' என்ற கவலை வாட்டியது. உதவ முன் வந்தன குரங்குகள். ஆனால், எந்த செடிக்கு, எவ்வளவு நீர் விட வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டது.
தோட்டக்காரன், 'செடியின் வேர்ப்பகுதி நீளமாக இருந்தால், அதிக நீர் தேவைப்படும். குள்ளமாக இருந்தால், குறைந்த அளவே போதும்...' என்றான்.
புரிந்தது போல் தலையாட்டி ஆரவாரம் செய்தன குரங்குகள்.
வெளியூர் சென்றவன் திரும்பும் நாள் வந்தது.
குரங்குகள் கை வண்ணத்தால், தோட்டம் மலர்ந்து இருக்கும் என, ஆவலுடன் எதிர்பார்த்து வந்தான். தோட்டத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் திகைத்தான். வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தன செடிகள்.
'என்ன காரியம் செய்தீர்...'
ஆத்திரத்தில் கர்ஜித்தான்.
'உங்கள் அறிவுரைப்படியே செய்ய ஆசைப்பட்டோம்; செடிகளை பிடுங்கி, வேரின் அளவை கணக்கிட்டு, தண்ணீர் விட்டோம்...'
தலையிலடித்துக் கொண்டான் தோட்டக்காரன்.
பிடுங்கினால், இறந்து விடும் என்பதை அறியாத குரங்குகளால் தோட்டம் பாழானது.
குட்டீஸ்... ஒரு வேலையை செய்பவரது அறிவுத்திறனை அறிந்து பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
மல்லிகா குரு

