PUBLISHED ON : செப் 19, 2020

கோவை மாவட்டம், தாசனுார், நடுநிலைப் பள்ளியில், 1975ல், 6ம் வகுப்பு படித்தபோது, தாத்தா, பாட்டிக்கு நான் செல்லம். சாலை ஓரக்கடையில் தின்பண்டம் வாங்க, ஐந்து, பத்து காசுகள் தினமும் தருவர்.
காலை, மாலையில் இஷ்டம் போல வாங்கி தின்பேன். இதனால், உடல் நலம் கெட்டு அடிக்கடி விடுப்பு எடுப்பேன். அரையாண்டு தேர்வின் போது, கடும் காய்ச்சல் கண்டது. இரண்டு வாரம் விடுப்பு முடிந்து, சோர்வுடன் வகுப்புக்கு சென்றேன்.
புதிதாக வந்திருந்த ஆசிரியர் கண்ணப்பன், அன்புடன் அழைத்து, விடுப்பு எடுக்கும் காரணத்தைக் கேட்டார். விவரமாக சொன்னேன்.
தெருவில் விற்கும் ஈ மொய்த்த தின்பண்டங்களை உண்பதால் ஏற்படும் கெடுதல்களை அட்டவணையாக தயாரித்து, வகுப்பறையில் மறுநாள் ஒட்டினார். சுகாதாரம் பேணுவது பற்றி எடுத்துரைத்தார்.
'காசு கொடுத்து யாராவது நோயை வாங்குவார்களா... அதை சேமித்தால், ஏழைகளுக்கு உதவலாம்...' என அறிவுரைத்து ஓர் உண்டியல் வாங்கிவந்தார்.
அதில், 10 ரூபாய் போட்டு சேமிப்பை, வகுப்பறையில் துவக்கி வைத்தார். சேர்ந்த பணத்தில் ஏழை மாணவர்களுக்கு, சீருடை, நோட்டு, பென்சில், பேனா வாங்கி கொடுத்து உதவினார். அது, மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தந்தது.
என் வயது, 57. அந்த ஆசிரியர் வலியுறுத்திய உடல்நலம் பேணல், சேமிப்பு பழக்கத்தை என் பேரன், பேத்தியருக்கும் கற்றுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
- சி.லிங்கம்மாள், கோவை.
தொடர்புக்கு: 97152 86288
