PUBLISHED ON : மார் 11, 2011

ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி வெற்றி பெறவும், மார்க்ஸிய கம்யூனிச சித்தாந்தத்தை ரஷ்யாவில் செயல்படுத்தவும், உலகின் முதல் நாடாக ரஷ்யாவை மாற்றவும் காரணமானவர் லெனின். இவரது முழுப்பெயர் விளாதிமிர் இலியச் லெனின் என்பதாகும்.
இவர் 1870ம் ஆண்டு சிம்பிர்ஸ்க் என்ற ஊரில் பிறந்தார். இளமையிலேயே பல சிறப்பான ஆற்றலையும், பல நற்குணங்களையும் பெற்றவராகத் திகழ்ந்தார். இவரது அறிவுக்கூர்மை பலரையும் கவர்ந்தது. சிறு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்தார். 1887ல் ரஷ்ய மன்னரைக் கொலை செய்ய தீட்டப்பட்ட சதியில் கலந்து கொண்டதற்காக, அவர் தமையனார் அலெக்சாண்டர் என்பவரும் தூக்கிலிடப்பட்டு, சகோதரரையும் இழந்தார்.
பெரியவர்கள் இல்லாது இவர் குடும்பம் தத்தளித்தது. குடும்பம் பல இன்னல்களை அடைந்தது. இதனால் இவர் குடும்பம் ஊர் ஊராக அலையவும் நேரிட்டது. இளமையில் லெனின் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையும் இதனால் ஏற்பட்டது.
ஜார் மன்னரின் கொடிய ஆட்சிக்காலம் அது. அதுகுறித்து சிந்தித்த லெனின், ரஷ்யாவில் ஜார் ஆட்சி நீக்கப்பட வேண்டும் என சிந்தித்தார். கொடுங்கோன்மை ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்பது இவர் லட்சியமாயிற்று. அதற்கு உழைக்கும் பாட்டாளி மக்களை ஒன்று திரட்டி, ஒரு புரட்சியை நடத்துவது அவசியம் எனத் நினைத்தார்.
அச்சமயம் ரஷ்யாவில், மிக ரகசியமாக செயல்பட்ட மார்க்ஸிய வட்டங்களுடன் இவர் தொடர்பு கொண்டார். ஆட்சியாளர்க்கு இது தெரியவந்தது. லெனினின் தீவிரக் கொள்கையால் இவர் நாடு கடத்தப்பட்டார். சைபீரிய பனிப்பாறையில், கடும்குளிரில் மூன்று ஆண்டுகள் சொல்ல முடியாத துயர் உற்றார். நாட்டுக்காக இதனைத் தாங்கிக் கொண்டார். இதற்காக இவர் மனம் தளரவேயில்லை.
1900ம் ஆண்டில், ஜெர்மனிக்குச் சென்றார். பிரஸ்ஸல்ஸ், பாரிஸ், லண்டன் போன்ற இடங்களுக்கும் சென்றார். இப்பயணம் இவரை வளர்த்து, மேலும் வீரராகவே உருவாக்கியது. எந்த நாட்டில், எங்கு இருந்தபோதும் இவர் தன் தாய்நாட்டை மறக்கவேயில்லை. ரஷ்யப்புரட்சி இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்தார்.
வெளிநாடுகளில் இருந்துகொண்டே, இவர் 'இன்க்ரா' என்று ஒரு புரட்சி ஏட்டை நடத்தினார். இதன் பொருள், 'தீப்பொறி' என்பதாகும். ரஷ்ய சோசலிச ஜனநாயகக் கட்சி என ஓர் இயக்கம் இருந்தது. இதன் இடதுசாரிப்பிரிவுக்கு லெனின் தலைவரானார். 1905ல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியின் போது இவர் ரஷ்யா திரும்பினார். புரட்சியில் பங்கும் பெற்றார். தொழிலாளர்களுக்கு ஊக்கம் தந்தார். ஆனால் இப்புரட்சி தோல்வியில்தான் முடிந்தது. தோல்விக்குப்பின் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறினார். 1914ல் சுவிட்சர்லாந்து நாட்டில் சென்று வசித்தார்.
1917ல் மீண்டும் ரஷ்யா திரும்பினார். நவம்பர் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி, ஜார் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். சோவியத் யூனியன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பல வழிகளிலும் உலக அரங்கில் ரஷ்யா முன்னேறக் காரணமாக இருந்தார்.
புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் நாட்டின் உற்பத்தியைப் பெருக்கினார். நாடு விரைந்து முன்னேறியது. ஆனபோதும் அவருக்கு நாட்டில் எதிரிகள் இருந்தனர். 1922ல் ஒரு சதி மூலம் இவரைக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் இவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், இவரின் உடலின் இடப்பகுதி துவண்டு போயிற்று. ஓய்வு எடுக்குமாறு பலர் வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை. அதோடு நாட்டுக்கு கடினமாக உழைத்தார். அந்த உழைப்பே எமனாகியது. வலப்பக்கமும் செயலிழந்தது. 1924ல் ஜனவரி 26ம் நாள் காலமானார்.
இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது உடல் பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. பெட்ரோ கிராட் 'லெனின் கிராட்' எனப் பெயரிடப்பட்டது. நவீன ரஷ்ய வரலாற்றை மாற்றியவர் இவர். இந்த ரஷ்யப்புரட்சி, உலகில் மேலும் பல புரட்சிக்கு வித்திட்டன.
***
