PUBLISHED ON : டிச 11, 2021

ஊட்டச்சத்தும், சுகாதாரமும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள்.
உடல் ஆரோக்கியத்தில், உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தினமும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.
உணவில், ஆறு வித ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை, புரதம், மாவு, கொழுப்பு, உயிர்சத்து, தாது உப்புகள் மற்றும் நீர்ச்சத்து ஆகும். உயிர் வாழ்வதற்கு, வளர்ச்சிக்கு, உடல் செயல்பாட்டிற்கு மற்றும் திசுக்களை சரி செய்ய இவை உதவுகின்றன.
அனைத்து ஊட்டச்சத்துகளையும், சரியான அளவில் கொண்டுள்ளதே ஆரோக்கிய உணவு. இதில், பழம், காய்கறி, தானியம், கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் மாமிச உணவுகள் அடங்கும்.
உணவை, சக்தி தருவது, வளர்ச்சி தருவது, பாதுகாப்பு தருவது மற்றும் கூடுதல் சக்தி தருவது என பிரிக்கலாம்.
சக்தி தரும் உணவில் அரிசி, கேழ்வரகு, கோதுமை, கம்பு, சோளம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவை அடங்கும். கேழ்வரகு, தானியங்களின் ராணி.
வளர்ச்சித் தரும் உணவில், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, தட்டை பயிறு, மொச்சை, கொள்ளு, சோயா பீன்ஸ் போன்றவை அடங்கும்.
பாதுகாப்பு தரும் உணவில், கீரை, பழம், காய்கறி அடங்கும்.
கூடுதல் சக்தி தரும் உணவில், கொழுப்பு, எண்ணெய், நெய், வெல்லம், தேன் அடங்கும்.
ஊட்டச்சத்துக் குறைந்தால், மூளை வளர்ச்சி தடைப்படும்; படிப்பில் திறன் குறையும்; செயல்திறன் இருக்காது. படிப்பு சரியாக அமையாவிட்டால், பணியில் சம்பளம் ஈட்டுவது கணிசமாக குறையும். ஊட்டச்சத்துடன் தொடர்புள்ள நீரிழிவு, உடல்பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வளரும் குழந்தைகளுக்கு சமச்சீர் உணவு வகைகள் வேண்டும். தானியங்கள், பருப்புகள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி வகைகள், பால் மற்றும் பால் தயாரிப்புகள் கொடுக்கலாம்.
தண்டுக்கீரை, முள்ளங்கி இலை, காலிபிளவர் இலை, பேரீச்சம்பழம், சோயா பீன்ஸ், இறைச்சி, மீன், முட்டை போன்றவை, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.
பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமுடைய பழங்கள், காய்கறிகள், தண்டுக்கீரை, வெந்தயக்கீரை மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவற்றில் வைட்டமின் சத்துகள் உள்ளன. குழந்தைகளின் பார்வைத் திறன் மேம்பட இவை உதவும்.
உணவு தயாரிக்கும் போது, சிறிதளவு நெய், எண்ணெய் சேர்த்தால் கலோரி அதிகரிக்கும்.
- ரம்யா லட்சுமி
