PUBLISHED ON : நவ 14, 2020

கமலாவும், விமலாவும் சகோதரிகள். வறுமையில் வாடினர். அன்றாடம் வாழ்வதற்கே சிரமப்பட்டனர். வேலை காரணமாக பிரிந்தனர்.
தினக்கூலிக்கு சென்று, கிடைத்த வருமானத்தில் சிறிதளவு கஞ்சிக் குடித்து வந்தாள் கமலா. அதிகாலையே காட்டுக்கு சென்றுவிடுவார். வேலை செய்து கிடைக்கும் சொற்ப பணத்தில் அரிசி வாங்கி திரும்புவாள்.
கடும் பசியில், சட்டியில் இருப்பதை எல்லாம் இருட்டில் தட்டுத்தடுமாறி உண்டு அப்படியே உறங்கி விடுவாள்.
சோற்றுக்கே வழியில்லாததால், விளக்கு ஏற்றுவது பற்றி சிந்திக்கவே இல்லை.
தினமும் இருளில் கிடந்தது வீடு. அது பற்றி கவலைப்படாமல் வாழ்ந்தாள்.
அதை பயன்படுத்தி, வீட்டுக்குள் குடியேறியது துாசி பூதம். சமைக்கும் சோற்றில், பாதிக்கு மேல் உண்டது. பின் அங்கேயே உறங்கி, விடியும் முன் மறைந்தது.
இப்படியே நாட்கள் கழிந்தன.
நீண்ட நாட்களுக்கு பின், சகோதரியை காண வந்தாள் விமலா.
'அடடா... வீடு ரொம்ப இருட்டா இருக்கே... இதில் தங்கவே பயமா இருக்குமே... உனக்கும் சேர்த்து, ஒரு வாரத்துக்கான அரிசி எடுத்து வந்துருக்கேன். கவலைப்படாதே... அதனால், சம்பள பணத்தில் அகல் விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கி வா...' என்றாள்.
தங்கை பேச்சை தட்ட மனமின்றி, எண்ணெய் வாங்கி வந்தாள் கமலா.
விளக்கை ஏற்றியதும், பளிச் ஒளியால் வீட்டில் கிடந்த அசுத்தம் எல்லாம் கண்ணில் பட்டது. இருவரும் நன்றாக சுத்தம் செய்தனர்; எழிலானது வீடு.
சுகாதாரம் நிறைந்த இடத்தில் துாசு பூதம் எப்படி வசிக்கும்; அன்றே, தனக்கான இடத்தை தேடி சென்று விட்டது.
எடுத்து வந்த அரிசியில், சிறிதளவு மட்டும் சமைத்தாள் விமலா.
பதை பதைப்புடன், 'இன்று இரவும் அரை வயிற்றுப் பட்டினி தான்' என எண்ணியபடி துவண்டாள் கமலா.
சமைத்து முடித்து சாப்பிட அமர்ந்தனர். வழக்கத்தை விட, அதிகமாக உணவு இருந்தது. இது கண்டு நெகிழ்ந்தாள் கமலா. அதற்கான காரணம் குறித்து யோசிக்க துவங்கினாள்.
பதில் தருவது போல், 'விளக்கு ஏற்றிய வீட்டில் தான் சுத்தமும், நிறைவும் குடியிருக்கும்னு சும்மாவா சொன்னாங்க...' என்றாள் விமலா.
உண்மையை உணர்ந்து, சுத்தமுடன் பராமரிப்பதை கடமையாக செய்து வந்தாள் கமலா. செல்வமும், நலமும் பெருகியது. வறுமை விலகி ஓடியது.
தளிர்களே... இருப்பிடத்தை சுத்தமாக பராமரிக்க பழகுவோம்.
- பா.லட்சுமி
