PUBLISHED ON : ஜூலை 25, 2014

ஒரு சமயம் கண்ணன் தனது நண்பர் களுடன், ஆடு, மாடுகளுடன் காட்டில் தொலைதூரம் சென்றார். வெயிலின் கொடுமை தாங்காமல் நண்பர்கள் ஓலமிட்டனர்.
''கண்ணா! எங்களால் வெயிலின் கடுமையைத் தாங்க முடியவில்லை. எங்கள் கால்கள் பொரிந்து போகின்றன. நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்!'' என்று கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, கதறிக் கூவினர்.
அப்போது தன் நண்பர்களைப் பார்த்துக் கண்ணன் கூறினார்.
''என் அன்புத் தோழர்களே! கவலைப் படாதீர்கள்! அதோ, ஒரு மரம் தெரிகிறது. பாருங்கள்! எல்லோரும் அதன் அடியில் தங்கி, அந்த நிழலில் இளைப்பாறலாம் வாருங்கள்!'' என்றான்.
சற்று நேரத்தில் எல்லோரும் அந்த மரத்தின் அடியிலே சென்று, அதன் நிழலிலேயே தங்கி ஆனந்தமாக இளைப்பாறினர்.
''கண்ணா! இந்த நிழல் எங்களுக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! நாங்கள் உன்னைத் தோழனாக அடைய எத்தனை கொடுத்து வைத்திருந்தோமோ தெரிய வில்லை! எங்களுக்குத்தான் நீ எப்படி எல்லாம் சமய சஞ்சீவி போல் உதவுகிறாய்! கண்ணா, உன்னை எப்படி போற்றுவது என்று எங்களுக்குப் புரியவில்லை. நீ எங்களைப் போன்ற சாதாரணச் சிறுவன் இல்லை. உன்னிடம் ஓர் அலாதியான மகிமை இருக்கிறது!'' இவ்விதம் ஆயர்பாடிச் சிறுவர்கள் கண்ணனைக் கொண்டாடினர்.
''என் அருமை நண்பர்களே! என்னை நீங்கள் கொண்டாட வேண்டாம். இப்போது நான் உங்களுக்கு ஒன்று சொல்லப் போகிறேன். அதாவது, நீங்கள் எல்லோரும் இதோ, இந்த மரத்தைப் போல உங்களைத் தியாகம் செய்து கொண்டு, பிறருக்கு உதவ வேண்டும். இந்த மரம், தன்னை நாடி வருபவர் களின் களைப்பு நீங்க நிழல் தருகிறது. பூ, காய், பழம், பட்டை, இலை எல்லாம் தந்து உதவுகிறது. எனவே, இந்த மரத்தை உதாரணமாகக் கொண்டு, நாம் நம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்குச் செய்யத் தயங்கக் கூடாது!'' என்றார் கண்ணன்.
அவர்களும், ''நாங்களும் மரத்தை போல, பிறருக்கு உதவி செய்வோம்!'' என்றனர்.
***
