PUBLISHED ON : ஜூலை 22, 2011

நவ சீனத்தின் சிற்பியான மா-சே-துங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். மா-சே-துங் படிப்பை முடித்தபின் சில காலம் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின் பீகிங் பல்கலைக்கழக நூல் நிலைய குமாஸ்தாவாக சேர்ந்தார்.
அப்போதுதான் கம்யூனிசக் கொள்கையில் அவர் ஈடுபாடு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதன் உயர் அதிகாரக் குழுவில் உறுப்பினர் ஆனார். சன்யாட்சென் மன்னராட்சியை எதிர்த்து சீனாவில் போராடிக் கொண்டிருந்தபோது, மா-சே-துங் பதினெட்டு வயது இளைஞராக அந்தப் புரட்சியின் மகத்துவத்தை நேரில் கண்டார். அதன் விளைவாக மா-சே-துங் புரட்சிக்காரராக மாறினார்.
மா-சே-துங் 1931-ம் ஆண்டில் சியாங்க்சி மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சிப் படையை திரட்டினார். இதை அறிந்த சியாங்-கே-ஷேக் புரட்சிப் படையை ஒடுக்க ராணுவத்தினரை ஏவி விட்டார். இதனை அறிந்த மா-சே-துங் தனது புரட்சிப் படையினருடன் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் செய்த தூரம் 8 ஆயிரம் மைல் தூரம்.
மா-சே-துங் செய்த இந்த மகத்தான சாதனை கம்யூனிஸ்ட் கட்சியினரின் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்றது. 1934-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக்கப்பட்டார்.
இரண்டாவது உலகப் போரின்போது சீனாவை ஜப்பான் தாக்கியது. ஜப்பானிடமிருந்து சீனாவைக் காப்பாற்றுவதே உடனடியாக செய்ய வேண்டிய காரியம் என்பதை உணர்ந்து, உள் நாட்டில் தன் அரசியல் எதிரியாக இருந்த சியாங்-கே-ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டு ஜப்பானை எதிர்த்துப் போராடினார் மா-சே-துங்.
மா-சே-துங் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் கொரில்லாப் போர் நடத்தி சியாங்-கே-ஷேக்கை சீனாவைவிட்டே துரத்தி அடித்தார். ஓட்டம் பிடித்த சியாங்-கே-ஷேக் பார்மோசா தீவில் போய் அடைக்கலம் புகுந்து, அங்கிருந்து கொண்டு ஒரு பொம்மை ஆட்சியினை நிறுவி, தான்தான் சீனாவின் உண்மையான அதிபர் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தார்.
ஆனால், அந்த விளையாட்டு நீண்ட காலம் நடக்கவில்லை. 1949 அக்., முதல் நாள், சீனா குடியரசு நாடாகியது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா-சே-துங் பதவி ஏற்றார். சீனாவின் அதிபரானதும் பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார் மா-சே-துங். பிரிட்டனைப் போலவே சீனாவை வளம் கொழிக்கும் நாடாக்க வேண்டும். அதுவும் குறுகிய காலத்துக்குள்ளேயே செய்து முடிக்க வேண்டும் என்று மா-சே-துங் விரும்பினார்.
ஆனால், அவர் மேற்கொண்ட திட்டங்கள் தோல்வியைத் தழுவின. 1961க்கும் 1963க்கும் இடையே சீனாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு நான்கு கோடி மக்களுக்கு மேல் மாண்டனர்.
1970-க்குப் பிறகு மா-சே-துங் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே, அரசுப் பணிகளில் ஈடுபடாமல் ஆலோசனைகள் மட்டும் கூறிவந்தார். 1976 செப்., 9-ம் தேதி சீன நாட்டு சிற்பி மா-சே-துங் காலமானார்.
***
