PUBLISHED ON : நவ 14, 2020

மதுரை மாவட்டம், மேலப்பட்டி, காந்திஜி நினைவு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
அப்போது, இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், மீண்டும் ஓராண்டு படித்து அனைத்து பாட தேர்வையும் எழுத வேண்டும்.
குடும்ப சிரமத்தால், 'முறையாக தேர்ச்சி பெறவில்லை என்றால், பனை தொழில் கற்க, என்னுடன் வந்து விடு...' என கூறிவிட்டார், தந்தை.
அக்கம் பக்கத்தவர், 'எப்படியும் பெயில் ஆகப்போற... படிப்புக்கு செய்ற செலவுக்கு பதிலாக, நாலு மாடு வாங்கி மேய்க்கலாம்...' என, ஏளனம் செய்தனர். தேர்ச்சி அடைந்துவிட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் குருபாதத்தை சந்தித்தேன். நிலைமையை எடுத்துக் கூறி, கணக்கு, ஆங்கில இலக்கணம் கற்று தரும்படி வேண்டினேன். என் ஆர்வம் கண்டு, 'கண்டிப்பாக வெற்றி பெறுவாய்...' என ஆசி கூறி, மகிழ்வுடன் கற்பித்தார்.
முழு கவனத்துடன் படித்து தேர்ச்சி அடைந்தேன். அரசு துறையில் பணியில் சேர்ந்தேன். முதல் நிலைக் கண்காணிப்பாளராக உயர்ந்து ஓய்வு பெற்றேன்.
இப்போது, எனக்கு, 61 வயதாகிறது. சொந்த கிராமத்தில் விவசாயம் செய்கிறேன். உற்சாகம் குன்றாமல் கற்றுத்தந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- மாரி.ஜெயக்கொடி, மதுரை.
தொடர்புக்கு: 97900 61014
