PUBLISHED ON : செப் 14, 2018

முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில், வயது முதிர்ந்த கிழவர் ஒருவர் வசித்து வந்தார். அவர், விவசாய வேலைகளில் கடுமையான உழைப்பாளி. அவருக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள, அரை ஏக்கர் நிலமும், மூன்று மகன்களும் இருந்தனர்.
முதல் இருவர் புத்திசாலிகள்; மூன்றாவன் படுசோம்பேறி என, அண்ணன்களும், தந்தையும் திட்டினர். அவனைப் பொறுத்தவரை, குடும்பத்துக்குப் பெரும் பாரம் என்றே கருதினர்.
'வெது வெது'ப்பான கணப்பு அடுப்பு மேடையில், இரவு, பகலாக உறங்கிக் கொண்டிருப்பான்; அதுதான், அவன் தினமும் செய்யும் வேலை.
கிழவர், தன் வயல்களில் கோதுமை விதைத்திருந்தார். ஆனால், ஒவ்வொரு இரவும், யாரோ வயலுக்கு வந்து, கோதுமைப் பயிர்களை நாசம் செய்து வந்தனர். அதை தடுக்க, 'என்ன வழி' என்று யோசித்துக் கொண்டிருந்தார் கிழவர். தள்ளாத வயதில், வயலுக்குச் சென்று, காவல் இருக்க முடியுமா என்ன... அதனால், வேலையை மகன்களிடம் ஒப்படைக்க எண்ணினார்.
ஒரு நாள் -
தன் புதல்வர்கள், மூன்று பேரையும் அழைத்தார் கிழவர்.
''மகன்களே... நம் கோதுமை வயலில், தினமும் யாரோ வந்து பயிர்களை திருடிச் செல்வதுடன், நாசம் செய்கின்றனர். எனவே, நீங்கள் வயலுக்குச் சென்று, துாங்காமல் இரவு முழுவதும் காத்திருந்து, திருடனைப் பிடிக்க வேண்டும்...'' என்று கூறினார்.
'சரி... அப்பா... நாங்கள் முறை வைத்து, திருடனைக் கட்டாயம் கண்டு பிடிக்கிறோம்...' என்று மகன்கள் மூவரும், ஒரு மித்த குரலில் கூறினர். அவர்கள், பொறுப்புடன் கூறியதைக் கேட்ட கிழவர், பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
புத்திசாலிப் புதல்வர்கள் என கருத்தப்பட்ட முதல் இரண்டு பேரும் திருடனைப் பிடிக்க, கோதுமை வயலுக்குச் சென்றனர். கடைசி மகனோ கணப்பு அடுப்பு மேடையில் துாங்கிக் கொண்டு இருந்தான்.
'எப்படியும் காலையில் திருடனோடு தான், மகன்கள் இருவரும் வருவர்' என்ற நம்பிக்கையுடன், இரவு படுக்கப் போனார் கிழவர். அந்த நினைப்பிலேயே துாங்கினார். அன்றைய இரவு, தன் மகன்கள், திருடனைப் பிடித்து வருவதாக கனவும் கண்டார்.
ஆனால், வயலுக்குச் சென்ற புத்திசாலி மகன்கள் இருவரும், சிறிது நேரத்தில், வயலின் ஓரத்தில் படுக்கையை விரித்து, நன்றாக துாங்கிக் குறட்டை விட்டனர்.
நள்ளிரவில் -
ஒரு குதிரை வந்து வயலில் இருந்த கோதுமைப் பயிர்களை தின்றதோடு, நாசமும் செய்து விட்டு போன விஷயம், அந்த புத்திசாலிகளுக்கு தெரியாது.
காலையில், 5:00 மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டிற்கு வந்தனர். 'மகன்கள் இருவரும் திருடனைப் பிடித்து வருவர்' என்று எதிர்பார்த்த கிழவர், ''என்னடா... வெறுங்கையோடு வந்திருக்கீங்க... திருடன் வரவில்லையா... அவனைப் பிடிக்காமல் என்ன செய்தீர்கள்... துாங்கிட்டீர்களா...'' என்று கேள்வி மேல் கேள்விகளை தொடுத்தார்.
'தந்தையே... நாங்கள் இருவரும் வெவ்வேறு இடத்தில், இரவு பூராவும் விழித்திருந்து காவல் புரிந்தோம். ஒரு நொடி கூட, நாங்கள் துாங்கவில்லை; திருடர்கள் யாரும், நம் கோதுமை வயல் பக்கம் வரவே இல்லை...' என்று கூசாமல் பொய் கூறினர்.
அவர்கள் கூறியதை நம்பி, அவர்களது பொறுப்புணர்ச்சியைப் பாராட்டினார். 'இனி, இன்று இரவு இந்த முட்டாள் கதிர் என்ன செய்யப் போகிறானோ... வீட்டில் துாங்குவது போல, வயல் காட்டிலும் துாங்கப் போகிறான்' என்று எண்ணிக் கொண்டார் கிழவர்.
அடுத்த நாள் இரவு, தந்தையிடம் சொல்லி விட்டு, கோதுமை வயலை நோக்கி புறப்பட்டான் கதிர். தன்னுடன் சுருக்குக் கண்ணி ஒன்றை எடுத்துச் சென்றான். வயலுக்குச் சென்றதும், அதற்குப் பக்கத்தில், ஒரு கல் இருப்பதைப் பார்த்தான். அதன் மீது உட்கார்ந்து, இரவு முழுவதும் துாங்காமல் காவல் புரிந்தான்.
நள்ளிரவு நேரம் -
சாம்பல் நிறமும், பொன்னிறமும் கொண்ட ஒரு குதிரை, நாலு கால் பாய்ச்சலில், கோதுமை வயலை நோக்கி ஓடி வருவதைக் கண்டான்.
அது வந்த வேகத்தில், பூமி அதிர்ந்தது. அதன் நாசித் துவாரங்களிலிருந்து புகை வெளி வந்தது. அதன் கண்களிலிருந்து, நெருப்புப் பொறிகள் பறந்தன. அந்த குதிரை, கோதுமை வயலில் மேய ஆரம்பித்தது. அது கோதுமைப் பயிரை தின்றதை விட, அழித்தது தான் மிக அதிகம்.
கதிர் பதுங்கிப் பதுங்கி தவழ்ந்து சென்று, அந்த குதிரையின் மீது கண்ணியை வீசினான்; கண்ணியில் நன்றாக மாட்டி தப்பிக்க முடியாமல் திணறியது.
அப்போது, குதிரை அவனைப் பார்த்து, ''என்னை விட்டு விடு கதிர்... உனக்கு நான் என்றும் விசுவாசமாக வேலை செய்வேன்...'' என்று மன்றாடியது.
''நல்லது... உன்னை விட்டு விடுகிறேன், ஆனால், நீ எனக்கு தேவைப்படும் போது, உன்னை எப்படி பார்ப்பது...'' என்று கேட்டான்.
''கிராமத்தின் எல்லைக்கு வந்து, மூன்று முறை விசில் அடித்து, 'தவிட்டு நிறக் குதிரையே... வெள்ளைப் புரவியே இங்கு வந்து, என் விருப்பத்தை நிறைவேற்று' என்று கூவினால், நான், உன் முன் தோன்றுவேன்...'' என்று கூறியது குதிரை.
''சரி... சரி... அப்படியே செய்கிறேன்... கோதுமை வயலில் மீண்டும் வந்து மேயக்கூடாது,'' என்ற வாக்குறுதி வாங்கி, அந்த குதிரையை போக விட்டான்.
மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, கம்பீர நடை போட்டு, வீட்டிற்கு வந்தான்; அவனை எதிர்பார்த்து, தந்தையும், அண்ணன்மார்களும் காத்திருந்தனர்.
- 1 தொடரும்...
