PUBLISHED ON : ஜூன் 20, 2020

பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெயின், அமெரிக்காவில், 1835ல் பிறந்தார்; இவரது இயற்பெயர் சாமுவேல் லாவ்கார்ன் கிளமன்ஸ். நகைச்சுவையை மையமாக வைத்து, கதை, கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றார்.
இளமை காலத்தில், அச்சுக்கோர்க்கும் தொழிலில் ஈடுபட்டார்; பின், கப்பல்களுக்கு வழிகாட்டியாகவும், சுரங்கத்திலும் பணிபுரிந்தார். அதன் பின் தான், எழுத்தாளரானார்.
'டாம் சாயர்' என்ற சிறுவன் பற்றி எழுதிய செய்திகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மேடைப்பேச்சிலும் சிறந்து விளங்கினார். பல நாடுகளில் சொற்பொழிவாற்றி, பணம், புகழ் பெற்றார்.
இளமை பருவத்தில் வேலை தேடி அலைந்தார்; ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆறு மாதங்கள் அங்கு வேலை செய்தார்.
ஒரு நாள், 'உங்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம்; வீட்டிற்குப் போகலாம்...' என்று, கோபத்தோடு கூறினார் இதழ் ஆசிரியர். இதைக் கேட்ட மார்க் ட்வெயின் அதிர்ச்சி அடைந்தார். மிகுந்த கோபத்தில், 'எதற்காக நீக்கினீர் என்பதை அறிந்து கொள்ளலாமா...' என்றார்.
'நீங்கள் சரியான சோம்பேறி; இது ஒரு காரணம் போதாதா...'
'இது தான் காரணமா... நீங்கள் கெட்டிக்காரர் என நினைத்திருந்தேன்; ஆனால், என்னை விட மோசமானவராக இருக்கிறீர்கள். எப்படி தெரியுமா... நான் சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க, உங்களுக்கு ஆறு மாதங்கள் பிடித்திருக்கிறதே...' என்று கூறி, வெளியேறினார் மார்க் ட்வெயின்.
ஒரு நாள், பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் நிறைய புத்தகங்களைப் பார்த்தார். அவற்றை படிக்க விரும்பி, 'நண்பரே... சில புத்தகங்களை எனக்கு கொடுங்கள்; படித்து விரைவில் கொடுத்து விடுகிறேன்...' என்றார்.
'ஐயா... எப்போது வேண்டுமானாலும், என் வீட்டில் வந்து படியுங்கள். புத்தகங்களை வெளியில் கொடுப்பதில்லை என, கட்டுப்பாடு வைத்துள்ளேன்...' என்றார் வீட்டுக்காரர்.
மார்க் ட்வெயின் அமைதியாக வீட்டிற்குத் திரும்பினார்.
சில நாட்களுக்குப் பின், பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.
'ஐயா... என் வீட்டில் புல் அறுக்கும் இயந்திரம் உடைந்து போய் விட்டது; உங்கள் இயந்திரத்தை தந்தால் நாளைக்கே திருப்பி தந்து விடுவேன்...' என்றார்.
'ஐயா... புல் அறுக்கும் இயந்திரத்தை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. அதை, என் வீட்டிற்குள் தான் பயன்படுத்த வேண்டும் என, கட்டுப்பாடு வைத்துள்ளேன். அந்த இயந்திரத்தை இங்கேயே பயன்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றார் ட்வெயின்.
பக்கத்து வீட்டுக்காரரின் முகத்தில் அசடு வழிந்தது.
எழுத்திலும், பேச்சிலும், நகைச்சுவை முத்திரை பதித்த மார்க் ட்வெயின், 1910ல் இவ்வுலகை பிரிந்தார். அவர் புகழ் நிலைத்திருக்கிறது.
