PUBLISHED ON : ஆக 05, 2011

''தாயே! உங்கள் வரலாறு என்ன? ஏன் நீங்கள் இவ்வாறு கவலைப்படுகிறீர்கள்?'' என்று அந்தக் கிழவியைப் பார்த்துக் கேட்டான் ஜீமூதவாகனன்.
''மகனே, நாங்கள் இருவரும் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சமயம், எங்கள் அரசி கத்துரு என்பவள் கருடனின் தாயாரை ஏமாற்றிக் கொன்று விட்டாள். இதை அறிந்த கருடன் எங்கள் உலகத்திற்கு வந்து கத்துருவின் குழந்தைகளைக் கொன்று தின்று விட்டான். அத்துடன் நில்லாமல் நாள்தோறும் நாகலோகத்தில் புகுந்து நாகங்களையெல்லாம் அழித்துத் தின்று வந்தான்.
''இதன் காரணமாக எங்கள் குலமே மெல்ல மெல்ல அழிந்து வந்தது. இதைக் கண்டு நாகராஜனும், வாசுகியும் கருடனிடம் வந்து, 'எங்கள் உலகத்திற்கு வந்து எங்கள் குலத்தை நிர்மூலமாக்கிவிடாதீர்கள். தங்களுடைய உணவுக்காக நானே நாள்தோறும் ஒரு சிறந்த நாகத்தை அனுப்பி வைக்கிறேன். என் வேண்டுகோளை ஏற்று எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டிக் கொண்டான்.
''கருடனும் அதற்குச் சம்மதித்தான். அது முதல் எங்கள் அரசர் நாகலோகத்திலிருந்து நாள்தோறும் ஒரு நாகத்தை இங்கு அனுப்பி விடுவான். கருடனும் அதைத் தின்றுவிடுவான். அந்த எலும்புக்குவியல்தான் இங்கே உள்ளது.
''இன்று என் மகனுடைய முறை. அவனைப் பிரிய எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதனால் தான் இவ்வாறு வருந்திக் கொண்டிருந்தேன்,'' என்றாள் கிழவி.
''தாயே! மனிதர்களாகப் பிறந்தால் தங்களால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கையை உடையவன் நான். எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் மகனை அழைத்துக் கொண்டு நாகலோகம் செல்லுங்கள். நான் அவனுக்குப் பதில் இங்கே கருடனுக்காகக் காத்திருக்கிறேன்,'' என்றான் ஜீமூதவாகனன்.
''ஐயா, தாங்கள் யாரோ தெரியவில்லை. என் பொருட்டு தாங்கள் உயிரிழக்க முன்வருவது நியாயமல்ல. தாங்கள் திரும்பிச் செல்லுங்கள்,'' என்றான் நாகலோகத்து இளைஞன்.
''மகனே! இவ்வளவு உதாரகுணமுள்ள நீயும் என் மகன்தான். எனவே, இந்தக் கொடுமையான காரியத்தில் இறங்க உன்னை நான் எப்படி அனுமதிக்க முடியும்? மேலும், உங்கள் இருவரில் எனக்கு நீயே உத்தமமான மகன். சாதாரணமாக ஒரு கண்ணாடிக் கல்லுக்காக எவராவது விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை இழக்கச் சம்மதிப்பார்களா? எங்கள் விதிப்படி நடப்பது நடக்கட்டும்; நீ திரும்பிச் செல் மகனே!'' என்று ஜீமூதவாகனனிடம் கூறினாள் கிழவி.
''தாயே! பிறருக்கு உதவுவதையே என் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவன். உங்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறது. தயவு செய்து அதைத் தடுக்காதீர்கள். நீங்கள் உங்கள் மகனை அழைத்துக் கொண்டு விரைவில் இவ்விடத்தை விட்டுச் செல்லுங்கள்,'' என்றான் ஜீமூதவாகனன்.
''தாயே! விரைவில் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுங்கள். கருடன் வருகிற நேரமாயிற்று. அவன் வரும்போது நீங்கள் இங்கிருந்தால் உங்களையும் கொன்று தின்றுவிடுவான். நான் இங்கு உள்ள காளி கோவிலுக்குச் சென்று அவளை வணங்கி விட்டுத் திரும்பி வந்து விடுகிறேன்!'' என்று தாயிடம் கூறிவிட்டுக் காளி கோவிலை நோக்கி நடந்தான் நாகலோகத்து இளைஞன். அவனுடைய வயதான தாயும் நாகலோகத்தை நோக்கிச் சென்றாள்.
இந்தச் சமயத்தில் கருடன் அங்கு வந்து விட்டான். அவன் தரையில் படுத்துக் கொண்டிருந்த ஜீமூதவாகனனைத் தன் அலகினால் கொத்திக் கொண்டு உயரப் பறந்தான். அச்சமயத்தில் ஜீமூதவாகனன் அணிந்திருந்த சில அணிகலன்கள் தரையில் விழுந்தன. அவை காட்டில் சென்று கொண்டிருந்த மலையவதியின் முன்னால் விழுந்தன.
ஜீமூதவாகனனைக் கருடன் மலையுச்சிக்குத் தூக்கிச் சென்றான். அவனைக் கொத்தித் தின்பதற்காகத் தன் அலகுகளினாலும், விரல்களினாலும் அவன் உடலைக் கிழித்தான் கருடன்.
ஜீமூதவாகனனின் உடலெங்கும் காயம். ரத்தம் ஆறாக வெளிப்பட்டது. அவனுடைய மாமிசத்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கருடன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தது. ஜீமூதவாகனன் ஒரு விதக் கவலையும் இல்லாமல் சிரித்த முகத்துடன் இருப்பது அதற்கு வியப்பைத் தந்தது. இதுவரையில் கோடிக்கணக்கான நாகலோக இளைஞர்களை அது சாப்பிட்டிருக்கிறது. ஒருவர் கூடச் சிரித்த முகத்துடன் இருந்ததில்லை.
இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கருடன், 'இவன் உண்மையில் நாகலோகத்தைச் சேர்ந்தவன் அல்ல. வேறு யாரோ ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும்' என்று நினைத்தது.
''கருடனே! எதற்காகச் சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்தி விட்டாய்? உன் வயிறு கொள்ளுமட்டும் சாப்பிடு,'' என்று கருடனை நோக்கிக் கூறினான் ஜீமூதவாகனன்.
''ஐயனே! தங்களை நாகலோகத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற எண்ணத்துடன் இந்தத் தகாத காரியத்தைச் செய்துவிட்டேன்; என்னை மன்னியுங்கள்!'' என்றது.
இச்சமயத்தில் காளி கோவிலிலிருந்து திரும்பிய இளைஞன் ஜீமூதவாகனனைக் காணாமல் தவித்தான். அங்கு சிதறி இருந்த ரத்தத் துளிகளைக் கண்டு கருடன் வந்து அவனைத் தூக்கிச் சென்றிருப்பதை அறிந்தான்.
''ஐயோ! நம் பொருட்டு அநியாயமாக ஒருவர் மரணமடைவதா? இதை நாம் தடுத்தே தீர வேண்டும் என்ற கருத்துடன் கருடன் சென்ற வழியே சென்று மலையுச்சியை அடைந்தான்.
கருடனையும் ஜீமூதவாகனனையும் கண்ட நாக இளைஞன், கருடனை நோக்கி, ''பறவைகளின் அரசே! நான்தான் உங்களுக்காக அனுப்பப்பட்டவன். அவரை விட்டுவிட்டு என்னைச் சாப்பிடுங்கள்,'' என்று கூறியவாறே அவ்விடத்திற்கு ஓடோடியும் வந்தான் நாக இளைஞன்.
ஜீமூதவாகனனின் அணிகலன்களைக் காட்டில் கண்டெடுத்த மலையவதி ஜீமூதவாகனனுக்கு ஏதோ ஆபத்து நேரிட்டு விட்டது என்பதை அறிந்தாள். உடனே தன் வீட் டுக்குச் சென்று தனது தந்தையையும், தூமகேதுவையும் அழைத்துக் கொண்டு கருடன் சென்ற வழியே சென்றாள். மலையுச்சிக்கு வந்ததும் அங்கு கருடன், ஜீமூதவாகனன், நாக இளைஞன் ஆகிய மூவர் இருப்பதை அனைவரும் கண்டனர்.
கருடன் ஜீமூதவாகனனைக் கொத்திக் குதறிச் சாப்பிட்டதால் அவன் உடலெங்கும் சிதைந்து சின்னாபின்னமாக இருந்தது. இதைக் கண்டு மலையவதி கதறி அழுதாள். இதைப் பார்த்து அவளுடைய தந்தையும், தூமகேதுவும் அழுதனர்.
இந்தக் காட்சியைக் கண்ட கருடன் 'நாம் செய்யக்கூடாத ஒரு பெரிய தவறைச் செய்து விட்டோம். இனி நாம் உயிர் பிழைத்திருக்கக் கூடாது. தீ மூட்டி அதில் விழுந்து நம் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்' என்று தீர்மானித்தது.
கணவனின் நிலையைக் கண்ட மலையவதி காளிதேவியை நினைத்துப் பிரார்த்தித்து, ''தாயே, அன்றொருநாள் எனக்குக் கணவராக வர இருப்பவர் வித்தியாதரர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகப் பல கோடி வருடங்கள் வாழ்வார் என்று கூறி வரம் அளித்தாயே. இன்று உன் வரம் பொய்த்துப் போய் விட்டதே தேவி,'' என்று வருந்தினாள்.
அப்பொழுது காளிதேவி அவள் முன் தோன்றி, ''மகளே! என் வாக்கு ஒரு போதும் பொய்க்காது,'' என்று கூறித் தன் கையிலிருந்த கமண்டலத்தில் உள்ள நீரை ஜீமூதவாகனனின் மீது தெளித்தாள்.
அடுத்த கணம் ஜீமூதவாகனன் அழகு மிளிரும் உருவத்தை அடைந்தான். அவனது காயங்கள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிட்டன.
''ஜீமூதவாகனா! உன்னைப் போல ஒரு தியாகியை இதுவரை நான் கண்டதில்லை. உன் தியாகத்தை மெச்சினேன். வித்யாதரர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக நானே உனக்கு முடிசூட்டுகிறேன்,'' என்று தன் கையாலேயே அவனுக்கு முடிசூட்டினாள் காளிதேவி.
இதைக் கண்ட கருடன் ஜீமூதவாகனனிடம் வந்து, ''சக்கரவர்த்தியே! தங்களுக்கு நான் செய்த கொடுமை மிகப் பெரியது. இதன்மூலம் நான் அழியாத அபகீர்த்தியைப் பெற்றேன். இதைப் போக்கிக் கொள்ள உங்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். எனவே, உங்களுக்குத் தேவையான வரத்தைக் கேளுங்கள்,'' என்றது கருடன்.
''கருடனே! நான் உங்களிடம் கேட்கும் வரம் இதுதான். உங்களால் சாப்பிடப்பட்டவர்களை மீண்டும் உயிர் பிழைக்குமாறு செய்ய வேண்டும். மேலும், நாள்தோறும் நாகங்களைச் சாப்பிட்டு வருவதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றான் ஜீமூதவாகனன்.
கருடனும் அவ்வாறே வரம் அளித்தான். அடுத்த கணம் எலும்புக்குவியல் எல்லாம் நாகங்களாக மாறின. ஜீமூதவாகனனை வாழ்த்தியபடியே நாகலோகத்திற்குச் சென்றன.
குட்டீஸ்... இப்போ உங்ககிட்ட ஒரு கேள்வி. ஜீமூதவாகனன், மலையவதி, நாக இளைஞன் இந்த மூவரில் யார் செய்த தியாகம் சிறந்தது என்று சொல்லுங்க. தெரியலியா? வழக்கம்போல புத்தகத்தை தலைகீழாக திருப்பிப் பார்த்து விடையை படிச்சிக்கோங்க... நீங்க எல்லாரும் 'தோத்துப்போன குட்டீஸ்' என்ற பட்டத்த சுமக்கணும். சரியா?
விடை: ஆற்றலுள்ள மனிதர்கள் தியாகம் செய்வதில் ஆச்சரியமில்லை. நாகலோகத்தை சேர்ந்த இளைஞன் செய்த செயல்தான் எல்லாவற்றிலும் சிறந்தது. உயிர் தப்புவதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகும் அதை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தனக்காக மற்றொருவர் உயிர் இழக்க நேரிடுவதை அவன் விரும்பவில்லை. எனவே, எல்லோரிலும் சிறந்தவன் நாகலோக இளைஞனே... சரியா செல்லூஸ்.
( - முற்றும்)
