PUBLISHED ON : ஜூன் 22, 2012
உழவன் ஒருவன் வயலை உழுது கொண்டிருந்தான். கலப்பை எதிலோ மோதிய ஓசை கேட்டது. அங்கே தோண்டிப் பார்த்தான். பழங்காலத்தைச் சேர்ந்த செப்புச் சிலை ஒன்று கிடைத்தது. அதைக் கையில் எடுத்த அவன், 'இந்தச் சிலை சிறிதாக உள்ளதே... பெரிதாக இருந்தால் எடைக்குப் போட்டுச் சிறிது பணம் பெறலாம். இதை யார் விலைக்கு வாங்குவர்?' என்று சிந்தித்தான்.
கலைப் பொருள்களை வாங்கும் செல்வந்தர் ஒருவரின் நினைவு அவனுக்கு வந்தது. அவரிடம் சென்று அந்தச் சிலையைக் காட்டினான். அந்தச் சிலையைக் கையில் வாங்கினார் அவர். மகிழ்ச்சியால் அவர் கண்களில் கண்ணீர் வந்தது. அதை மேசையின் மேல் வைத்து அழகு பார்த்தார்.
சிறிது தொலைவில் நின்று அதன் அழகைப் பார்த்தார். ''நீ கொண்டு வந்தது அரிய சிலை. இந்தப் பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுக் கொள்!'' என்று மகிழ்ச்சியுடன் தந்தார் அவர்.
பணத்துடன் வீடு திரும்பிய அவன், 'அந்தச் சிலையை எடைக்குப் போட்டால் பத்து ரூபாய் கூட கிடைக்காது. இதற்குப் பத்தாயிரம் ரூபாய் தந்துள்ளாரே... முட்டாளாகத்தான் அவர் இருக்க வேண்டும்' என்று நினைத்தான்.
அந்தச் சிலையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். 'ஆ! என்ன அழகு! என்ன கலைப் படைப்பு. இதை உருவாக்கிய கலைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆயிரம் ஆண்டுப் பழமைமிக்க சிலை என்பதே இதன் பெருமை அல்லவா? இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் பசியே எடுக்காதே... இப்படிப்பட்ட கலைப் படைப்பை ஒருவன் விற்கிறானே. அவன் மடையனாகத்தான் இருக்க வேண்டும்!' என்று நினைத்தார்.
