PUBLISHED ON : செப் 06, 2013
சுந்தரம் மிகுந்த அறிவாளி. அவருக்கு சொந்தமான காளைமாடு, அவருக்கு அடுத்த வீட்டுக்காரருடைய பசுவை முட்டித்தள்ளி காயப்படுத்திவிட்டது.
இதைக்கண்ட சுந்தரத்துக்கு பயமாகிவிட்டது. ''பசுமாடு காயமடைந்ததற்காக அடுத்த வீட்டுக்காரன் தன்னை ஏசிப்பேசுவதுடன், நஷ்டஈடும் கேட்பானோ?'' என்று அஞ்சினார்.
அதனால், அந்தப்பிரச்னையை சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். உடனே அவர் அடுத்த வீட்டுக்காரனிடம் சென்றார்.
''ஐயா! உம்முடைய பசு என்னுடைய காளைமாட்டை முட்டித் தள்ளிவிட்டது!'' என்று போலிக் கோபத்துடன் கூறினார்.
அடுத்த வீட்டுக்காரன் குழப்பமடைந்துவிட்டான். தன்னுடைய பசு சுந்தரத்தின் காளையை முட்டித் தள்ளிக் காயப்படுத்தியதற்காகத் தன்னிடம் சுந்தரம் நஷ்டஈடு கேட்பாரோ என்று பயந்தான் அடுத்த வீட்டுக்காரன்.
''சுந்தரம் அவர்களே! இது ஒரு சாதாரண விஷயம். இரண்டு மாடுகள் சந்தித்தால் சண்டையிடுவதும், முட்டித்தள்ளிக் கொள்வதும் இயல்பான விஷயம். இதைப்போய் நீங்கள் பெரிது படுத்தலாமா?'' என்று அடக்கமான குரலில் கூறினான்.
அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த சுந்தரம் அடுத்த வீட்டுக்காரனை நோக்கி, ''தாங்கள் கூறும் நியாயத்தை ஏற்றுக் கொள்கிறேன். இது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால், ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லியாக வேண்டும். நடைபெற்ற நிகழ்ச்சி வேறு. என்னுடைய காளை மாடுதான், உம்முடைய பசுவை முட்டித்தள்ளிக் காயப்படுத்திவிட்டது. ஆகவே, இந்த சாதாரண விஷயத்தைத் தாங்கள் பெரிது படுத்தமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் வருகிறேன்!'' என்று கூறிவிட்டு எழுந்தார்.
அடுத்த வீட்டுக்காரன் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் திகைப்படைந்து நின்று விட்டான். பக்கா கேடியான தன்னையே சுந்தரம் ஏமாற்றி விட்டதை எண்ணி வியந்தார்.
