தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அடக்கம் உயர்வு தரும்!

அடக்கம் உயர்வு தரும்!

அடக்கம் உயர்வு தரும்!


PUBLISHED ON : டிச 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் கணேசன். அறிவுக்கூர்மை நிறைந்தவன். நல்ல பண்புகளை கடைபிடித்து வந்தான். கணித பாடத்தில் முதுகலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான். வேலை வாய்ப்பை தேடி முயற்சித்தான். நல்ல வாய்ப்பு கிடைக்காத போதும், சும்மா இருக்காமல் ஏதாவது வேலைகள் செய்து வந்தான்.

இதற்கிடையே -

மதுரை கல்லுாரி உணவகம் ஒன்றில் சர்வர் பணி கிடைத்தது. உணவு, தங்குமிடத்துடன் சொற்ப சம்பளத் தொகைதான் கிடைத்தது. மிகவும் பணிவுடன் அந்த பணியை ஏற்று சிறப்பாக செய்து வந்தான். அடக்கமாக செயல்பட்டான். நல்ல பண்புகளை வாழ்வில் கடைபிடித்து வந்தான்.

பணி செய்த இடத்தில் கல்வித்தகுதியை எப்போதும் கூறியதில்லை. உணவகத்துக்கு கூட்டமாக வரும் மாணவர்கள், ஆரவாரமாக அமர்ந்து தேவையான உணவு வகைகளை ஆர்டர் செய்வர். அவற்றை விரைவாக எடுத்து வந்து, சிரித்த முகத்துடன் பணிவாக பரிமாறுவான் கணேசன். எவ்வளவு தொல்லை தந்தாலும் கோபம் கொள்ள மாட்டான்.

அன்று -

கணித துறையில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் சிலர் உணவகம் வந்தனர். குறும்புடன் உத்தரவிடும் குரலில் உணவு வகைகளை எடுத்து வரக்கூறினர்.

வழக்கம் போல் அன்புள்ளத்துடன் பரிமாறிக் கொண்டிருந்தான் கணேசன்.

அப்போது, 'நேற்று மாலை பேராசிரியர் கரும்பலகையில் எழுதிய கணித வினாவிற்கு எவ்வளவு முயன்றும் விடை கிடைக்கவில்லையே...' என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து அதற்கான விடையை தேடி விவாதித்தனர்.

இதை கவனித்தபடி உணவை பரிமாறினான் கணேசன்; யாரும் எதிர்பாராத வகையில் ஒரே நொடியில் விடையை கூறினான்.

அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த மாணவர்கள், 'ஐயா... உங்களுக்கு எப்படி இந்த கணக்குக்கு விடை தெரிந்தது...' என்று விசாரித்தனர்.

கணேசன் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதை அறிந்தனர். தன்னடக்கத்துடன் பணியை கவனித்து வருவதை கண்டு பாராட்டினர். எந்த பணியும் இழிவானதல்ல என்பதை அவனிடம் கற்றனர். மாணவர்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தை பெற்றான் கணேசன்.

தொடர்ந்து, பெரிய நிறுவனம் ஒன்றில் அவனுக்கு வேலை கிடைத்தது. மாணவர்களிடம், பிரியாவிடை பெற்று சென்றான்.

குழந்தைகளே... அடக்கமான செயல்கள் வாழ்வில் உயர்வு தரும் என்பதை உணருங்கள்!

வதுவை சுந்தரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us