PUBLISHED ON : ஜூன் 13, 2014

பூரான்ஸ் தேசத்தில் 'இல் எ விலாய்னெ' என்ற மாவட்டத்தில் 'டுபேன்போட்' என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் ஆயிரத்து நானூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் 'டுசெல்டிக்ட்' என்னும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
பாரம்பரியமிக்க இந்த மக்களின் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இவர்களது முக்கியத் தொழில் சூனியம், வசியம் போன்றவை வைத்து மந்திர தந்திரங்கள் செய்வது.
அநேகமாக, அனைவருமே மந்திர வாதிகளாக இருப்பதால் வெளியூர் களைச் சேர்ந்த யாரும் இவர்களோடு அதிகமாகத் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. பயம் தான் முக்கியக் காரணம்.
எனவே, இந்த ஊர் இவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்து வருகிறது. சுதந்திரமாக திரிந்து வருகின்றனர். கேள்வி கேட்பார் கிடையாது.
அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற மந்திரவாதிகள் அனைவருமே இங்குதான் வசிக் கின்றனர். பில்லி, சூனியம் வைக்க வேண்டுமென்றால் ரகசியமாக இந்த ஊருக்கு வந்து மந்திரவாதிகளைச் சந்தித்துச் செல்லும் மனிதர்கள் அந்தப் பகுதியில் உண்டு.
ஆக, அந்த ஊரே ஒரு மர்மம் நிறைந்த சூனியப் பிரதேசமாகவே காட்சியளிக்கிறது.
இப்படிப்பட்ட மர்மம் நிறைந்த திகிலை ஏற்படுத்தும் 'டுபேன்போட்' கிராமத்தில் இருந்து தொடங்குகிறது 'ப்ரோசல்யான்டே' காடு.
சுமார் 7 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் அகன்று விரிந்து கிடக்கும் மிகப்பெரிய காடு இது. புராணங்கள் பேசும் 'ஆர்தேரியன்' காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட காடு என்னும் சிறப்பு இதற்கு உண்டு.
இத்தகைய பழமையான காட்டில் 12வது நூற்றாண்டில் 'டுமெர்லன்ட்' என்ற பிரபலமான மந்திரவாதி ஒருவன் வசித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மந்திரவாதியைப் பற்றிய வரலாற்றுச் சம்பவங்கள் நிறைய உண்டு. அவனது சமாதியும் இந்தக் காட்டுக்குள் இப்போதும் இருந்து வருகிறது.
மந்திரவாதிகள் நிறைந்திருந்த காரணத்தாலோ என்னவோ இன்றும் இந்த ப்ரோசல்யான்டே காடு மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே காட்சியளித்து வருகிறது.
இங்கு பழமையான இரண்டு கோட்டைகள் உள்ளன. இதில் ஒரு கோட்டை, அழகில் சிறந்தவளாக ஜொலித்த பெண் ஒருத்திக்காக மெர்லின் என்பவனால் கட்டப்பட்டது. மெர்லின் புராண காலத்து மந்திரவாதி.
மற்றொரு கோட்டையும் இளம் பெண் ஒருத்திக்காகக் கட்டப்பட்டதே, ஆனால், இதன் வரலாறு சற்று பயங்கரமானது.
இளம் பெண் என்பதை விட சிறுமி என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். இவளுக்குத் திருமணம் நடந்தது. ஆனால், எதிரிகள் இவளைப் பழிவாங்கத் துடித்தனர்.
எனவே, திருமணமான அன்றே அந்தப் பெண்ணை உயிரோடு குழிதோண்டிப் புதைத்து விட்டனர் பாவிகள். அவளது நினைவாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோட்டை.
ஆனால், கோட்டை கட்டிய பிறகுதான் அங்கு அப்பெண்ணின் ஆவி சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. இது ஏதோ கெட்ட ஆவி என்று பலரும் கூறினாலும் உயிரோடு மண்மூடிக் கொல்லப்பட்ட பெண்தான் ஆவியாக அந்தக் கோட்டைக்குள் அலைந்து திரிவதாகப் பலரும் நம்பினர். எனவே, அதனருகே செல்வதற்கு அஞ்சி நடுங்கினர்.
கிட்டத்தட்ட 12வது நூற்றாண்டில் நடந்த சம்பவம் இன்றும் இங்கு தொடர் கிறது. கோட்டைக்குள் திடீர் திடீரென்று ஒருவித சப்தம் கேட்பதாகப் பலரும் இப்போதும் கூறுகின்றனர்.
இந்தக் காட்டுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் இந்தக் கோட்டை யின் அருகில் கூட செல்வதில்லை. அப்படியே செல்ல நினைத்தவர்களும் அதனை நெருங்கியதும் பயந்துபோய் பின் வாங்கி விடுகின்றனர். உள்ளே ஏதோ பயங்கரமான அடிவயிற்றைப் பிசைகிற மாதிரியான சப்தம் கேட்பதாகச் சொல்கின்றனர். திகில் நிறைந்த கோட்டையாகவே இது இன்றும் இருந்து வருகிறது.
இதனிடையே இந்தக் காடும் அப்படியே திகில் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. இந்தக் காட்டில் நிறைந்து காணப்படும் பெரிய, பெரிய மரங்கள் அனைத்துமே சுமார் ஐநூறு வயதானதாகக் கூறப்படுகிறது. இந்த மரங்களைப் பற்றிக் கூட அப்பகுதி மக்கள் பல திகில் கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.
- மர்மங்கள் தொடரும்
