PUBLISHED ON : ஜூன் 13, 2014

அவர் பெயர் ஜோசப் பிரீஸ்ட்லி. 1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.
ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ஒரு பவுண்டு தான் வருமானம். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியையும் ஏற்றுச் செய்து வந்தார் பிரீஸ்ட்லி.
அந்த தேவாலயத்துக்குப் பக்கத்தில் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. அங்கிருந்து எப்போதும் வீசும் துர்நாற்றம் பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்தது. அந்த துர்நாற்றம் சாராயம் காய்ச்சும் தொட்டியி லிருந்து கிளம்பும் ஆவியி லிருந்து தான் வருகிறது என்று அனுமானித்த அவர், ஆலைக்குள் சென்று அந்த ஆவியை ஒரு பெரிய கண்ணாடிப் புட்டியில் பிடித்துக் கொள்ள அனுமதி கோரினார். ஆலை நிர்வாகியும் அதற்கு அனுமதியளித்தார்.
அதன்படி, அந்த ஆவியைக் கண்ணாடி புட்டியொன்றில் பிடித்துக்கொண்டு திரும்பிய பிரீஸ்ட்லி அதை ஆராய்ந்தார். புட்டியின் மூடியை லேசாகத் திறந்து அந்த ஆவி வெளி யேறும் போது அதற்கு மேல், எரியும் விறகை நீட்டினார். உடனே அது அணைந்து விட்டது. அதன் மூலம் தீயை அணைக்கும் சக்தி அந்த ஆவிக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த ஆவியைப் பற்றி பிரபல விஞ்ஞானி களின் நூல்களில் ஏதாவது சொல்லப் பட்டுள்ளதா என்று தேடினார். ஒன்றும் தெரிய வில்லை. அந்த ஆவியைத் தனியாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.
அவர் கண்டுபிடித்த அந்த வாயு தான் 'கரியமில வாயு.' அத்துடன் வேறு சில வாயுக் களையும் சேர்த்து ஆராய்ந்த பிரீஸ்ட்லி பிராண வாயுவையும் கண்டுபிடித்தார்.
சாராய வடிப்பின் போது அதில் ஏற்படும் ஒரு வகை நுரையைப் பார்த்த பிரீஸ்ட்லி அந்த நுரைக்கும் ஒரு வாயுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று யூகித்து, அதைச் சோதிக்க எண்ணினார். எனவே, அந்த நுரையைச் சேகரித்து ஒரு புட்டியிலிட்டு அதில் சிறிது நீரைக் கலந்து குடித்துப் பார்த்தார்.
அந்தக் கலவையில் சிறிது மணமும், ஒரு ருசியும் இருந்தது. அதை அருந்தியதும் ஒரு வகையான உற்சாக உணர்வும் தோன்றியது. அந்த பானத்தை மேலும் ஆராய்ந்து சில உண்மை களைப் புரிந்து கொண்டார் பிரீஸ்ட்லி. சில பொருள் கள் புளிக்கும் போது உண்டாகும் கரியமில வாயுவை நீரில் கரைத்தால் அது இனிப்பும், நல்ல மணமும், உற்சாகமும் தரக்கூடிய ஒரு வித பானமாக ஆகும் என்பது பாதிரியார் பிரீஸ்ட்லிக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவருடைய அந்தக் கண்டுபிடிப்புத்தான் சோடா என்றழைக்கப்பட்டது. பின்னர் பல வகை வண்ண எசன்சுகளைக் கலந்து சோடா, கலர் பானங்களாகவும் உற்பத்தி செய்யப் பட்டது. பாதிரியாராக இருந்து விஞ்ஞானியாக உயர்ந்த பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்த துர்நாற்றம் தான் சோடா, கலர் பானங்களையும் கரியமில வாயுவையும் கண்டுபிடிக்க உதவியதுன்னு சொன்னா ஆச்சரியமா இல்ல...
***
