தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நோ காகம் அண்ணா!

நோ காகம் அண்ணா!

நோ காகம் அண்ணா!


PUBLISHED ON : டிச 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே தப்பித்தோம், பிழைத்தோம் என மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தது எலி.

அந்த நேரத்தில் தெருவோரமாக இருந்த மதில் மீது ஒரு காகம் அமர்ந்திருந்தது. அந்தக் காகம் எலியைக் கண்டுவிட்டது. எலியைக் கண்ட மகிழ்ச்சியில் அந்தக் காகமானது, எலியின் அருகே பறந்து வந்து அதனை விரட்டிப் பிடிக்க முயன்றது. தனது தடித்த அலகினால் எலியைக் கொத்தப்போனது.

காகம் தன்னைத்தாக்க வருவதைக் கண்ட எலி கீச்... கீச்... என்று அலறியபடி பரிதாபமாகக் காகத்தைப் பார்த்தது.

''காகம் அண்ணா! நீங்கள் செய்வது சரிதானா? மண்டபத்தில் உள்ளே வந்த மனிதருக்குப் பயந்து தெருவில் ஓடிவந்தேன். இங்கே தெருவில் நீங்கள் என்னைப் பிடித்துக் கொல்ல நினைக்கிறீர்களே... என் மீது கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டீர்களா?'' என்று அன்போடு கேட்டது.

அதனைக் கேட்ட காகம், ''எலியே! எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. என் பசிக்கு இப்போது உணவு தேவைப்படுகிறது. அதனால் உன்னை இரையாகக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். அதனால், அடம்பிடிக்காமல் எனக்கு இரையாகிவிடும்!'' என்று கண்டிப்புடன் கூறியது.

''காகம் அண்ணா! உங்கள் பேச்சிலும் ஒரு வித நியாயம் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உங்கள் குஞ்சுக்கு இதைப்போல் ஓர் ஆபத்து நேர்ந்து அது வேறு ஏதாவது பறவையிடமோ, விலங்குகளிடமோ சிக்கிக் கொண்டால் அது என்ன பாடுபடும். உங்கள் குஞ்சு போன்று என்னை நினைத்து எனக்கு உயிர் பிச்சை கொடுங்களேன்!'' என்று பரிவோடு கெஞ்சியது எலி.

எலியின் சாமர்த்தியமான பேச்சினால் காகத்தின் மனது இளகிவிட்டது. சிறிது நேரம் யோசனை செய்த காகம் எலியைப் பார்த்து, ''எலியே! உன்னைப் பார்த்த போது எப்படியாவது உன்னை சாப்பிட்டு விட வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது.

''உன் அன்பான வார்த்தைகளைக் கேட்கிற போது அந்த எண்ணம் என் மனதைவிட்டு அகன்றுவிட்டது. நீ உன் சாதுர்யமான பேச்சினால் என் மனதினுள் இருக்கிற பாச உணர்ச்சியினைத் தட்டி எழுப்பிவிட்டாய். இனிமேல் நீ பயமில்லாமல் செல்லலாம்!'' என்று கூறியபடி வேறு இரையைத் தேடிப் பறந்து சென்றது.

எலியும் உயிர்பிழைத்த மகிழ்ச்சியில் தன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடியது. அன்பான பேச்சினால் எதிரியின் மனதைக் கூட மாற்றிவிடலாம் என்பதை அந்த எலி மிக நன்றாகவே அன்று புரிந்து கொண்டது. அன்புக்கு இத்தனை பெரிய சக்தியிருப்பதையும், அது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டது. தானும் பிறரிடம் அன்போடு இருக்க வேண்டும் என்று அன்று முதல் அது உறுதி பூண்டது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us