PUBLISHED ON : டிச 28, 2019

வேலுார் மாவட்டம், ஆம்பூர், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1994ல், 8ம் வகுப்பு படித்த போது, தோழி ஜானகியும் உடன் படித்தாள். சிறு வயது முதலே, நட்புடன் பழகி வந்தோம்.
குடும்பத்தில், ஐந்து பெண்களில் மூத்தவள் என்பதால், திருமண ஏற்பாடு செய்தனர் அவளது பெற்றோர். அதை விரும்பாதவள், 'என்னை வற்புறுத்துகின்றனர்...' என்று கூறி, கதறி அழுதாள்.
அதை தடுத்து நிறுத்த என் அம்மாவின் உதவியை நாடினேன். அவரோ, 'பிறர் குடும்ப விஷயத்தில் தலையிட்டால் நன்றாக இருக்காது...' என்று, ஒதுங்கிக் கொண்டார்.
எங்கள் தமிழாசிரியை லலிதாவிடம் கூறினேன். மறுநாளே, ஜானகி வீட்டிற்கு சென்றவர், 'பெண் குழந்தையை பாரமாக நினைக்காதீர்; நன்கு படிக்க வைத்தால், குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்வர்...' என்று, அறிவுரைத்து தடுத்து நிறுத்தினார். பிரச்னையை தைரியமாக எடுத்து கூறிய என்னை பாராட்டினர்.
நன்றாக படித்த ஜானகி, கணித ஆசிரியையாக பணியாற்றுகிறாள். தங்கைகள், நான்கு பேரையும் படிக்க வைத்து, திருமணம் முடித்தாள். அவளது மனஉறுதி வியக்க வைக்கிறது.
- எஸ்.ஓவியா, சென்னை.
