PUBLISHED ON : டிச 18, 2015

சின்னமனூர் என்னும் கிராமத்தில் கலிவரதன் என்ற முரடன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் எல்லாரிடமும் வம்பு சண்டைக்குப் போவது, அடிப்பது, உதைப்பதுதான்.
அவனை திருத்த ஊர் பெரியவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் ஊர் மக்கள் அனைவரும் அவனை வெறுத்தனர். அவன் ஊரில் இருக்கும்வரை நிம்மதியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தனர்.
ஊர்மக்கள் ஒன்று கூடி கலிவரதனை குறித்து, அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
ஊர்மக்களின் புகாரை கேட்ட அரசாங்க அதிகாரிகள் ஆடிப்போயினர். அவனைப் பிடித்தால் தங்கள் குடும்பத்திற்கு தீங்கு வந்துவிடும் என்று பயந்தனர். அத்துடன் அவனுக்கு எதிராக சாட்சி சொல்பவர் யாரும் இல்லாததால் அவனுக்கு தண்டனையும் வாங்கி தர முடியாது என்று கையை விரித்து விட்டனர்.
ஊர் மக்களும் மிகவும் சோகத்துடன் இருந்தனர். அந்த ஊரில் புத்திசாலியாக இருந்த ஒரு பெரியவர் கலிவரதனின் கொட்டத்தை அடக்க ஒரு யோசனை சொன்னார்.
''இந்த முரடனை நம் உடல் வலிமையால் வெல்ல முடியாது. ஒரு உபாயத்தைக் கையாண்டுதான் இவனை ஒழிக்க வேண்டும். நான் சொல்கிறபடி செய்யுங்கள்; இந்தப் போக்கிரியின் பிரச்னை ஒழிந்து விடும்,'' என்றார்.
எப்படியோ கலிவரதனின் தொல்லை தீர்ந்தால் சரி! என்றிருந்த மக்கள் பெரியவரின் யோசனையை செயல்படுத்துவதாக வாக்களித்தனர். அதன்படி திட்டம் செயல் படுத்தப்பட்டது.
ஒருநாள்_
கலிவரதன் வெளியூருக்கு சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பினான். அப்போது எதிரே வந்த சிறுவன், ''என்ன அண்ணே உடம்புக்கு ஒண்ணும் முடியலையா, முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கே,'' என்று சோகத்துடன் கேட்டான்.
கலிவரதனுக்கு சிரிப்பாக வந்தது.
''என்னடா என் உடம்பை பற்றி எனக்குத் தெரியாதா? உனக்கு கண் சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன்,'' என்று கூறினான்.
கலிவரதன் சற்று தூரம் சென்றிருப்பான் வேறொரு மனிதன் அவனைப் பார்த்து, ''என்னப்பா கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கிறது. உடம்பு வேறு இளைத்திருக்கிறது. உனக்கு ஏதோ நோய் வந்திருக்கு என்று நினைக்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு சென்றான்.
கலிவரதன் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
'இவர்களுக்கெல்லாம் என்னவாயிற்று. முதலில் ஒரு சிறுவன் நம் உடம்பைப் பற்றி விசாரித்தான். இவனும் ஏதோ சொல்கிறானே எனக்கு எதுவும் நோய் வந்தது போல் தெரியவில்லையே...' என்று யோசித்தபடி சென்றான்.
இன்னும் சற்று தூரம் சென்றிருப்பான் எதிரே வந்த ஒரு முதியவர் கலிவரதனை தடுத்து நிறுத்தி உற்றுப் பார்த்தார்.
''ஏம்பா உன்னைப் பார்த்தால் பெரிய நோய் வந்தது போல் தெரிகிறதே உன் கையைக் கொடு தொட்டுப் பார்க்கிறேன்,'' என்று அவன் கையைப் பிடித்தார்.
பிறகு திடுக்கிட்டவராக, ''என்ன தம்பி உன் உடம்பு கொதியாய் கொதிக்கிறதே... இப்படி கடுமையான காய்ச்சல் அடிக்கும்போது ஊர் சுற்றலாமா? உடனே போய் வைத்தியரைப் பார் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்,'' என்றார்.
பெரியவர் தன் வழியே சென்றார். கலிவரதன் இப்போது முற்றிலும் குழம்பிப் போனான். தன்னைத் தானே தொட்டு பார்த்துக் கொண்டான். அவன் உடம்பு சுடுவதுபோல் அவனுக்கு தெரிந்தது. அவனுக்கு படபடப்பாக இருந்தது. தட்டுத் தடுமாறி, வீட்டை அடைந்தான்.
கலிவரதன் வீடு சென்றதும், அவனுக்கு உண்மையிலேயே காய்ச்சல் வந்துவிட்டது. கட்டிலில் அப்படியே சாய்ந்து விட்டான்.
ஊர்காரர்களெல்லாம் அவனை சூழ்ந்தபடி, 'எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே, இவனுக்கு ஏதோ கொடிய வியாதி வந்திருக்கும் போலிருக்கிறதே... மருத்துவம் பார்க்காவிட்டால் இவன் உயிர் பிழைக்க மாட்டான் என்று நினைக்கிறேன்' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஊர்மக்கள் பேசியதை கேட்ட கலிவரதனுக்கு பயம் வந்துவிட்டது. இனி நம் உயிர் போன மாதிரிதான் என்று நினைத்துக் கொண்டான். சுற்றி இருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, ''தயவு செய்து ஒரு நல்ல வைத்தியரை அழைத்து வந்து என் உயிரை காப்பாற்றுங்கள்,'' என்று கதறினான்.
ஊர்மக்கள் தங்களுக்குள் சிரித்தவாறு, அவர்கள் முன்பே சொல்லி வைத்திருந்த வைத்தியரை கலிவரதன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வைத்தியரும் கலிவரதனை சோதனை செய்து பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.
''தம்பி உனக்கு வந்திருப்பது எவராலும் தீர்க்க முடியாத வியாதி. இந்த வியாதிக்கு மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. நீ கொஞ்ச நாளில் மரணம் அடைந்து விடுவாய். அதனால் நீ விரும்புவதையெல்லாம் சாப்பிட்டு விட்டு இறைவனை தியானம் செய்து கொண்டிரு... இதைத் தவிர வேற வழியில்லை,'' என்றார்.
கலிவரதனுக்கு வேதனையாக இருந்தது அவன் கண்களில் தண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. 'எந்தவித காரணமும் இல்லாமல் தனக்கு ஏன் இப்படிப்பட்ட வியாதி வர வேண்டும்?' என யோசித்தான். கிராம மக்களைத் தான் கொடுமைப்படுத்தியதின் காரணமாக அவர்களின் சாபத்தால் தமக்கு இந்த வியாதி வந்திருக்கும்' என்று நினைத்தான்.
அவன் உள்ளம் கடவுளை வேண்டியது.
'ஒருவேளை நான் உயிர் பிழைத்து எழுந்து விட்டால் யாருக்கும் எந்த தொல்லையும் தரமாட்டேன் என்று முடிவு செய்து கொண்டான் என்றாலும் தம் உயிரை காக்க மருந்தே இல்லை,' என்று வைத்தியர் சொல்லியதை கேட்டு அழத் தொடங்கினான்.
நாட்கள் சென்றன-_
மூச்சுப் பேச்சு இல்லாமல் கலிவரதன் படுக்கையில் கிடந்தான். ஊர்மக்கள் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.
''எப்படியோ ஒரு படுபாவி ஒழிந்தான். இனிமேல் நம் கிராமத்திற்கு நல்ல காலம் தான்!'' என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தனர்.
கலிவரதனுக்கு ஊர் மக்கள் பேசிக் கொள்வது மயக்க நிலையிலும் லேசாக கேட்டது. தட்டுத் தடுமாறி படுக்கையை விட்டு எழுந்தான். அவர்களைப் பார்த்து, 'ஐயா நீங்கள் பேசியதையெல்லாம் கேட்டேன். நான் உங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்து இருக்கிறேன் என்று இப்போதுதான் புரிகிறது. என்னை எல்லாரும் மன்னித்து விடுங்கள், நான் இந்த ஊரை விட்டே போகிறேன், இனி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம், வேறு ஊருக்கு சென்று ஏதோ வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்,'' என்றான்.
ஊர் மக்கள் பெரியவரின் தந்திரம் பலித்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். எப்படியோ ஒரு போக்கிரியின் தொல்லையிலிருந்து தங்கள் கிராமம் விடுபட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.
குட்டீஸ்... இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது. மனசுல பயத்தையும், நோயையும் யாராவது சொல்லிவிட்டால் அதை அப்படியே உங்க மனசு நம்பிடுது. அதன்படியே உங்கள் உடம்பும் ஆகிடுது பார்த்தீர்களா?
இதற்குத்தான் மனதை எப்போதும் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளணும் என்பது!
