PUBLISHED ON : டிச 18, 2015

குட்டீஸ்... நம் இந்திய நாடடில் உள்ள அணைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
டெக்ரி அணை!
இந்தியாவின் மிக உயரமான அணை. உலகின் 8வது மிக உயரமான அணையும் இதுதான். இதன் நீர் விவசாயத்திற்கும், குடிக்கவும் பயன்படுகிறது.
பாகிரதி நதியில் கட்டப்பட்ட இதில், நீர் மட்டம் 261 மீட்டர் உயரத்துக்கு செல்லும். இதன் மூலம் 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
பக்ரா அணை!
இந்தியாவின் பெரிய அணை. ஆசியாவின் இரண்டாவது பெரிய நீர்த் தேக்கமாகவும் இது அமைந்துள்ளது. இதன் கோவிந்த சாகர் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏரி.
பக்ரா அணை, சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா மாநில மின் உற்பத்திக்கு மிக உதவியாக உள்ளது.
ஹிராகுட் அணை!
உலகின் நீளமான அணைகளில் ஒன்று. 26 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியுள்ளது.
ஒடிசாவின் மகாநதிக்கு குறுக்காக கட்டப் பட்டுள்ளது. மிகப் பெரிய அணை மட்டுமல்லாமல் மண்ணால் கட்டப்பட்ட அணை இது.
நாகர்ஜுனா சாகர் அணை!
உலகின் பெரிய மலையை உடைத்து கைத் திறனால் உருவாக்கப்பட்ட அணை. கிருஷ்ணா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஏராளமான வாய்க்கால்களைக் கொண்ட அணை இது. 11ஆயிரத்து 472 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.
இடுக்கி அணை!
இந்தியாவின் ஒரே வளைவு அணை. கேரளா வின் பெரியார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. குரவன் மலா, குறத்திமலா மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது. 780 மெகா வாட் மின்சாரத்துக்கு உதவுவதுடன், விவசாயத்திற்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய வளைவு அணையும் இதுதான்.
இந்திராசாகர் அணை!
மத்திய பிரதேசத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய நீர்த் தேக்கத்தைக் கொண்டது. பலநோக்கு எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த அணையின் மூலம் ஒருபக்கம் விவசாயமும், மறுபுறம் மாநிலத்திற்கு தேவையான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
பவானி சாகர் அணை!
இந்தியாவில் மண்ணால் உருவான மிகப் பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய அணை. சுதந்திரம் அடைந்த பின் முதலில் கட்டப்பட்ட சில அணைகளில் இதுவும் ஒன்று.
மைத்தான் அணை!
ஆசியாவில் பூமிக்கு கீழே அமைக்கப் பட்டுள்ள முதல் அணை இது. வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாகும். ஜார்கண்ட் பாராகர் நதியின் மீது கட்டப்பட்ட இதன் மூலம், 60 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த அணையின் மூலம் உருவான ஏரி... 65 சதுர கிலோ மீட்டருக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்தார் சரோவர் அணை!
குஜராத்தின் ராஜ்பிப்லா நகர் அருகே நர்மதா நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப் பட்டுள்ளது. நீண்ட கான்கிரிட் புவியீர்ப்பு அணை இது. சிமெண்ட் மிக அதிக கொள்ளளவு பயன் படுத்தப்பட்டுள்ள உலக அணைகளில் இதற்கு இரண்டாவது இடம்.
கொய்னா அணை!
மகாராஷ்டிர மாநிலத்தில் கொய்னா நதி மீது கட்டப்பட்டுள்ளது. மாநிலத்தின் மிகப் பெரிய அணைகளில் ஒன்று. சுதந்திரத்திற்குப் பின் துவக்கப்பட்ட மிகப்பெரிய சிவில் எஞ்சினியரிங் பிராஜக்ட்களில் இதுவும் ஒன்று!
நீர் ஆற்றலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யவும், விவசாயத்திற்கு பயன்படுத்தவும் இது கட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் அணை!
கர்நாடகாவில் காவிரியின் மீது கட்டப் பட்டுள்ள அணை இது. மைசூர் முன்னால் மன்னர் கிருஷ்ண ராஜ உடையார் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைசூர் மற்றும் மண்டியா பகுதி விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்பட்டதாகும். அத்துடன் மைசூர் மற்றும் பெங்களூரின் பெருமளவு குடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதும் இதுதான்!
மேட்டூர் அணை!
இந்தியாவின் பெரிய மற்றும் பழைய அணை களில் இதுவும் ஒன்று. அரித்து உருவாக்கப்பட்ட இடுக்கின் இடையே அமைந்துள்ளது. காவிரி... இங்கு மீண்டும் சமவெளியை அடைகிறது. நீர் ஆற்றலை பயன்படுத்தி மின் உற்பத்தி நடை பெறும் மின் நிலையங்களில் இதுவும் குறிப்பிடத் தக்கது.
எல்லாப் பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ளதால், ஒரு கவர்ச்சி ஏற்பட்டு, மக்கள் குவிகின்றனர். இதனால் பூங்கா உட்பட பல பொழுது போக்கு வசதிகள் இங்கு உண்டு.
ஸ்ரீ சைலம் அணை!
அழகான இடுக்கின் மீது கிருஷ்ணா நதியின் குறுக்கே ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இதன் நீளம் 512 மீட்டர். இந்த நீர்த்தேக்கத்தில் 800 சதுர கிலோ மீட்டர் தண்ணீரை தேக்க முடியும்.
1960ல் கட்டத் துவங்கி 1980ல் தான் இந்த அணை வேலை முடிந்து திறக்கப்பட்டது.
துங்க பத்ரா அணை!
கர்நாடகாவின் துங்கபத்ரா நதி மீது கட்டப் பட்டுள்ளது. நீர் பாசனம், மின்சாரம், வெள்ளத் தடுப்புக்காக, உருவாக்கப்பட்ட அணை. துங்கபத்ரா நதி மீது அமைந்துள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கம் இதுதான். ஒரு கட்டத்தில் கிருஷ்ணா வில் இணைந்து விடும். ஆக, கிருஷ்ணாவின் உபநதிகளில் இதுவும் ஒன்று.
ரிகாந்த் அணை!
உத்தரபிரதேசம் பிப்ரி நதியின் மீது இது குறுக்காக கட்டப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச எல்லையில் இது அமைந்துள்ளதால் இரு மாநில நீர் தேவைக்கும் மிக உதவியாக இருக்கும் வகையில் இதன் நீர்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர் தேக்கத்தை 'கோவிந்த வல்லப பந்த் சாகர்' என சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர்.
இவை தவிர நாடு முழுவதும் ஏராளமான குட்டி அணைகளும் பல தேவைகளுக்காக கட்டப்பட்டுள்ளன.
- ஐஸ்வர்யா.
