PUBLISHED ON : ஆக 16, 2019

பள்ளியில் படித்த போது, என் குடும்பம் வறுமையில் வாடியது. செருப்பு, நல்ல சீருடை எதுவும் இன்றி, மிக சாதாரணமாக பள்ளிக்குச் செல்வேன்.
ஒரு சமயம், பக்கத்து ஊர் திருவிழாவிற்கு கூட்டிச் செல்ல என் பாட்டி வந்திருந்தார்.
'நல்ல உடை எதுவும் இல்லை; உறவினர் முகத்தில் எப்படி விழிப்பது...' என எண்ணி, திருவிழாவுக்கு செல்ல மறுத்து விட்டேன்.
மறுநாள், வகுப்பறையில் உற்சாகமின்றி அமர்ந்திருந்தேன். இதை கவனித்த நண்பர்கள், காரணத்தை கேட்டு அறிந்தனர்.
ஒருவன், விலையுர்ந்த கை கடிகாரத்தை கொடுத்தான்; இன்னொருவன், புதிய செருப்பு கொடுத்தான்; மற்றொருவன் அணிந்திருந்த, 'பெல்ட்'டை கொடுத்தான். கை செலவிற்கு கொஞ்சம் பணமும் தந்து, திருவிழாவிற்கு அனுப்பி வைத்தனர். நானும், 'டிப்டாப்'பாக சென்று திரும்பினேன்.
இந்த விஷயம், வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து விட்டது. என்னை பார்த்ததும், 'பணம், சொத்து இல்லை என்று கவலைப்படாதே... காசு, பணத்தை விட, நல்ல நண்பர்களை இறைவன் உனக்கு கொடுத்திருக்கார். நீ தான் பெரிய பணக்காரன்...' என, தட்டி கொடுத்தார்; எனக்கு உதவியவர்களையும் பாராட்டினார். அந்த சம்பவம் நினைவில் தங்கியுள்ளது.
- டி.அருள்பிரகாஷ், திருப்பூர்.
