PUBLISHED ON : மார் 04, 2011

ஓர் ஊரில் யூகாங் என்ற பெயருடைய பெரியவர் இருந்தார். அவர் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.
தன் நண்பரின் விலை உயர்ந்த பட்டாடையைக் கடன் வாங்கினார். அதை அணிந்து கொண்டு தன் வேலைக்காரனுடன் புறப்பட்டார்.
காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்த போது ஈரத்தரை வழுக்கிப் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தார் அவர்.
பதறிய வேலைக்காரன் எப்படியோ பள்ளத்திலிருந்து அவரை வெளியே கொண்டு வந்தான்.
அவர் கையில் பலத்த அடிபட்டிருப்பதைக் கண்டான் அவன். அந்தக் காயத்திற்குக் கட்டுப் போட முயன்றான்.
''பிறகு கட்டுப் போடலாம். முதலில் எங்காவது சென்று தண்ணீர் கொண்டு வா. சேறு பட்டு ஆடை அழுக்காக உள்ளது. அதைக் கழுவ வேண்டும்,'' என்றார் அவர்.
''ஐயா! உங்கள் கைக்கு முதன்மை தராமல் ஆடைக்கே முதன்மை தருகிறீர்களே, ஏன்?'' என்று கேட்டான் அவன்.
அதற்கு அவர், ''கை என்னுடையது. அதற்காக நான் யாரிடமும் பதில் சொல்ல வேண்டாம். இந்தப் பட்டாடை வேறொருவருடையது... அவருடைய பொருளை பத்திரமாக அவரிடம் ஒப்படைக்க வேண்டுமே...'' என்று பதில் சொன்னார்.
கடன்பட்டு பட்டாடை உடுத்துவதை விட சொந்தமான கதர் ஆடையே மேல் என்பதை உணர்ந்தார் யூகாங்.
***
