PUBLISHED ON : நவ 30, 2019

தாதன்குளம் கிராமத்தை ஒட்டி, அடர்ந்த காடு இருந்தது. அதில் வசித்த மயில், இயற்கை பொருட்களால் அழகிய வீட்டை கட்டியது. அதன் அருகே, தரமான நாவல் மரம் ஒன்றை வளர்த்தது. அந்த மரம் கனிகளை பொழிந்தது.
இரக்கமும், அன்பும் நிறைந்த மயில், அந்த பழங்களை புசித்ததுடன், கேட்ட உயிரினங்களுக்கு எல்லாம், மனம் உவந்து வாரி வழங்கியது. பழங்களை வயிறார உண்ட உயிரினங்கள், பணிந்து வணங்கி வாழ்த்தின. பெரும் புகழுடன் விளங்கியது மயில்.
நகரப்பகுதியில் வசித்த குரங்கு ஒன்று, வழி தவறி அந்த காட்டுக்கு வந்தது. நாவல் மரத்தில் பழங்கள் நிரம்பியிருப்பதைக் கண்டு குதுாகலித்தது. மயிலுக்கு புகழ் பெருகியிருப்பதைக் கண்டதும், அதன் மனதில், வஞ்சக எண்ணம் முளைவிட்டது.
மயிலை ஒழித்துக்கட்டி, நாவல் மரத்தை அபகரிக்க முடிவெடுத்தது. அதற்காக ஒரு திட்டத்தை தீட்டியது. நேரடியாக சண்டையிடாமல், மயிலுக்கு புகழ்மாலை சூட்டி வலையில் வீழ்த்தும் திட்டம் தான் அது.
செயற்கை வண்ணங்களை எடுத்து வந்து மயிலை சந்தித்த குரங்கு, 'உன்னை விட அழகான பறவையை, இந்த காட்டில் நான் பார்த்ததே இல்லை. அதனால் தான், எல்லா உயிரினங்களும் உன்னை வணங்குகின்றன. உன்னை இன்னும் அழகு படுத்தினால் உலக அளவில் புகழ் பெறுவாய். உலக அழகி போட்டியில் பங்கேற்கலாம்...' என, இனிக்க இனிக்க பேசியது.
புகழ்ச்சியில் மயங்கியது மயில். குரங்கு சொன்னவற்றை எல்லாம் தலையாட்டி ஒப்புக்கொண்டது. எடுத்து வந்திருந்த வண்ணங்களை, மயில் தோகை மீது பூசியது குரங்கு. அதன் இயற்கை அழகு மங்கியது.
இதை அறியாது, கபடமான வார்த்தைகளை நம்பிய மயில், 'எல்லா விவரமும் தெரிந்து இருக்கிறாய்... உன் போல் அறிவுள்ள குரங்கை காண்பது அரிது. நீ என்னுடன் தங்கினால் மகிழ்ச்சி அடைவேன்...' என்றது.
தீட்டி வந்த திட்டம் சுலபமாக நிறைவேறியதால், குரங்கின் மண்டையில் கர்வம் ஏறியது. மயிலின் வீட்டில் குடியேறியதும், வஞ்சக எண்ணத்தை அரங்கேற்ற துவங்கியது.
முதல் உத்தரவாக, 'மயிலை வணங்கும், எல்லா உயிரினங்களும் என்னையும் வணங்கி செல்ல வேண்டும்' என, நிபந்தனை விதித்தது.
குரங்கின் சொல்லுக்கு, தலையாட்டும் பொம்மையாக மாறியது மயில்.
அடுத்தக்கட்டமாக, 'இனிமேல், நாவல் பழங்களை இலவசமாக சாப்பிட அனுமதிக்க முடியாது; சிறிய தொகை கொடுத்தால் தான் பழங்கள் கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட அளவுதான் பறிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது குரங்கு.
உயிரினங்கள் எல்லாம் கவலை அடைந்தன. குரங்கின் அட்டூழியம் அதிகரிப்பது பற்றி, மயிலிடம் புகார் கூறின. எதையும் காதில் வாங்காமல், புகழில் மயங்கித் திரிந்தது மயில். புகார் கூறிய உயிரினங்களையும் கடிந்து கொண்டது. உண்மையை அறியும் திறனை முற்றாக இழந்தது மயில்.
இதுதான் தக்க தருணம் என, சேட்டையை தீவிரமாக்கியது குரங்கு. காட்டை வளப்படுத்த உழைத்த உயிரினங்களை எல்லாம் அடித்து நொறுக்கியது.
தவறான ஆலோசனைகளை கூறி, மயிலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியது. அதன் புகழை கெடுத்தது. அழகில் மிளிரலாம் என கூறி, மயிலுக்கு விஷத்தை ஊட்டியது. அதை, அமிர்தம் என்று குடித்த மயில், மயங்கி சாய்ந்தது. உடனே, அதன் இறக்கைகளை வெட்டி வீசியது. அழகிய தோகையை இழந்த மயில் துடிதுடித்து உயிரை விட்டது.
இதை அறிந்த காட்டு உரியினங்கள் அழுது புலம்பின. செய்வதறியாது திகைத்தன. அவை திரண்டு, காட்டின் பாதுகாப்பு மந்திரியான, கரடி தலைவனிடம் முறையிட்டன. குரங்கின் கொட்டத்தை அடக்க அதிரடியாக வீயூகம் வகுத்தது கரடி.
மயிலின் வீட்டையும், நாவல் மரத்தையும் சுற்றி வளைத்தது கரடி கூட்டம். இதைக் கண்டதும், அஞ்சி நடுங்கி தப்பி ஓட முயன்றது குரங்கு.
கம்பீரமாக சிரித்த கரடி தலைவன், 'குரங்கே... உன் ஆட்டம் எல்லாம் முடிந்தது. நீ தப்பிக்கவே முடியாது; மயிலை கொன்ற குற்றத்துக்கு தக்க தண்டனை கிடைக்கும்; இனியும் உன் பொய் மூட்டை பிரசாரம் எல்லாம் எடுபடாது. தவறை உணர்ந்து சரணடைந்து விடு...' என, எச்சரித்தது. வேறு வழியின்றி, சரண் அடைந்தது குரங்கு. அதற்கு, தக்க தண்டனை கிடைத்தது.
மழலைகளே... புகழுரையில் மயங்கிய மயிலின் கதியை பார்த்தீங்களா... முகஸ்துதி செய்வோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். சுற்றிலும் நடக்கும் உண்மைகளை அறிந்து, நன்மை செய்து வாழுங்கள்.
எஸ். டேனியல் ஜூலியட்
