தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சேரன் செங்குட்டுவன்! (1)

சேரன் செங்குட்டுவன்! (1)

சேரன் செங்குட்டுவன்! (1)


PUBLISHED ON : நவ 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேர நாடு, வளம் நிறைந்தது. மலைகளில் விளையும் பொருட்கள் கணக்கின்றிக் கிடைத்தன. இந்த நாட்டின் தலைநகரம் வஞ்சி, அகன்ற தெருக்களைக் கொண்டது. அழகு மிக்க இந்த நகரை பாதுகாக்க கோட்டை எழுப்பப்பட்டிருந்தது. வில் கொடி, அதன் மேல் கம்பீரமாகப் பறந்தது.

கோட்டை மதிலைச் சுற்றிய அகழியில், முதலைகள் நீந்திக் கொண்டிருந்தன. தாமரை, அல்லி மலர்கள் அழகு சேர்த்தன. சிறப்புடன் திகழ்ந்த சேர நாட்டை, மன்னர் நெடுஞ்சேரலாதன் ஆண்டு வந்தார்.

இமயம் வரை படையெடுத்து, வாகை சூடியதால், இமயவரம்பன் என்றும் அழைக்கப்பட்டார். மன்னருக்கு, இரண்டு ஆண் மகன்கள்; மூத்தவன் செங்குட்டுவன்; இளையவன் இளங்கோ. மன்னருக்குரிய கல்வி, போர் பயிற்சிகளை பெற்று வந்தனர்.

ஒரு நாள் -

அரண்மனைக்கு வந்த ஜோதிடரிடம், 'என் மூத்த மகன், அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விட்டான்; எனக்கும் வயதாகிறது. எனவே, அவனிடம் அரசு பொறுப்பைக் கொடுத்து, நிர்வாகப் பயிற்சியளிக்க விரும்புகிறேன். அவன் ஜாதகத்தைப் பார்த்து நேரம் காலத்தை கணியுங்கள்...' என்று கூறினார் மன்னர்.

ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், கை விரல்களை, ஜாதக சுவடியின் மீது, அப்படியும், இப்படியும் வைத்தார். பின், யோசனையில் ஆழ்ந்தார். கண்களை மூடியபடி, ஒரு நிமிடம் தியானம் செய்தார்.

ஜோதிடரின் நடவடிக்கை, மன்னருக்கு வினோதமாக தோன்றியது.

ஜாதகப்படி, மூத்தவனுக்கு அரசாட்சி யோகம் இல்லை. அந்த விஷயத்தை சொன்னால், மன்னர் கோபித்துக் கொள்வாரே என்று எண்ணிய ஜோதிடர், காலம் கடத்திக் கொண்டிருந்தார். பின், வேறு வழியின்றி, 'மன்னா... மூத்தமகனுக்கு ஆட்சி யோகம் இல்லை; அந்த யோகம், இளைய மகனுக்கு உண்டு...' என்றார்.

மன்னர் ஒரு கணம் ஆடிப் போனார். மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது முறையா என்று எண்ணினார். ஜோதிடர் சொல்லை மீறக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

ஜோதிடர் கூற்று கசிந்து, அரண்மனை வட்டாரத்தில், குழப்பத்தை ஏற்படுத்தியது; செய்தியறிந்த இளவரசர்களும் குழம்பினர்.

அவையை கூட்டினார் மன்னர். அமைச்சர்களும், பிரமுகர்களும் நடக்கப் போவதை அறிய, ஆவலுடன் கூடியிருந்தனர். அவர்களிடம், 'அவையோரே... எனக்குப் பின், இந்த நாட்டை ஆளும் பொறுப்புக்கு இளவரசரை நியமிக்க விரும்புகிறேன். ஜோதிடர் கூறியபடி, இளவரசர் ஆகும் தகுதி, இளைய மகன் இளங்கோவுக்கே இருக்கிறது; அவனையே இளவரசனாக்க விரும்புகிறேன்...' என்றார்.

இதைக் கேட்ட இளங்கோ, 'மூத்தவன் இருக்க, இளையவன் ஆளுதல் முறையல்ல; நான், இந்த நகரத்தில் இருந்தால், ஜோதிடர் சொற்படி, அரசு பொறுப்பை ஏற்க வேண்டி வரும். முறை தவறிக் கிடைக்கும் எந்த பெருமையும் எனக்கு வேண்டாம். என் முன்னோர் மகிழ, இப்போதே துறவு கொள்கிறேன்...' என்று வெளியேறினார்.

துறவறம் பூண்ட இளங்கோ, குணவாயிற் கோட்டத்தில், முனிவர்களுடன் வாழ்ந்து வந்தார். பின்னாளில், 'சிலப்பதிகாரம்' என்ற மாபெரும் காப்பிய நுாலை எழுதி புகழ் பெற்றார்.

மன்னர் நெடுஞ்சேரலாதனுக்கு பின், மூத்தவன் செங்குட்டுவன் சேர நாட்டின் சிம்மாசனம் ஏறி, ஆட்சி புரிய துவங்கினான்.

சோழனும், பாண்டியனும், அவன் மீது பொறாமை கொண்டனர்; அவர்கள், கொங்கருடன் சேர்த்து போர் தொடுத்தனர். அவன் பயந்துவிடவில்லை. எதிர்த்து வந்த மூவரையும் வென்று, மண்டியிட வைத்தான்.

அச்சமயத்தில், ஒரு தீவை, பழையன் என்பவன் ஆண்டு வந்தான். ரோமாபுரியிலிருந்து, சேர நாட்டுக்கு சரக்கு ஏற்றி வந்த கப்பல்களை கொள்ளையிட்டான். இது, செங்குட்டுவனுக்கு தீராத தலைவலியாக இருந்தது. கப்பல்களில் வீரர்களை ஏற்றிச் சென்று, பழையனை வீழ்த்தினான்.

இதைத் தொடர்ந்து, தன் நண்பன் அநுகைக்காக, பாண்டிய மன்னனோடு போரிட்டு வென்றான். கடல்மல்லை நாட்டின் அருகே வியலுார் இருந்தது. அதன் தலைவன் நன்னன் வேண்மான் என்பவன், கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தான்; அவனையும் போரிட்டு வென்றான்.

இவ்வாறு, வெற்றி வீரனாக விளங்கினான் செங்குட்டுவன்.

ஒருமுறை, மனைவி வேண்மாளுடன், மன்னன் செங்குட்டுவன் மலைவளம் காண சென்றான். மலை மீது அருவிகள் பாய்ந்தன. மரம், செடி மற்றும் கொடிகள் பசுமை படர்ந்து இதயத்தைக் குளிரச் செய்தன. வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின; மான்கள் துள்ளிக் குதித்து விளையாடின. மயில்கள் ஆடின; குயில்கள் கூவின; கிளிகள் கொஞ்சின. இந்த காட்சியை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு வந்த வேடர்கள், 'மன்னா... இங்கே உள்ள வேங்கை மரத்தடியில், ஒரு மங்கையை சில நாட்களுக்கு முன் கண்டு கலங்கினோம்; அவள் மிகவும் வருத்தத்துடன் காணப் பட்டாள். வானிலிருந்து இறங்கிய ஓர் ஊர்தியில் வந்தவன், அவளை ஏற்றி சென்றான்...' என்று கூறினர்.

செங்குட்டுவனுக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது; அது தொடர்பான விவரங்களை விரிவாக அறிய, சாத்தனார் என்பவரை சந்தித்தான். அவர், கண்ணகி, கோவலன் கதையைச் சொன்னார்.

இதைக் கேட்ட செங்குட்டுவன், அந்த பெண்ணை வணங்க முடிவு செய்தான். கண்ணகி உருவத்தை கல்லில் செதுக்கி, கோவில் கட்ட விரும்பினான். அதற்கு உரிய கல் எடுப்பது பற்றி, அமைச்சர்களுடன் விவாதித்தான்.

அமைச்சர்கள், 'மன்னா... பாண்டிய நாட்டில் உள்ள பொதிகை மலையில், கல் எடுத்தால், காவிரியில் நீராட்ட வேண்டும்; இமயமலையில் கல் எடுத்தால், புனித கங்கையில் நீராட்டலாம்...' என்று ஆலோசனை கூறினர்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us