PUBLISHED ON : நவ 30, 2019

ஆடித்தபசு நிகழ்ச்சியால் சிறப்பு பெற்றது, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகரம். இங்குள்ள கோமதி அம்பாள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். எங்கள் அறிவியல் ஆசிரியர் ஞானவேல், அடித்து துன்புறுத்த மாட்டார். ஒழுக்கத்தையும், சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவார். மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தராமல், புரிந்து படிக்க அறிவுறுத்துவார்.
ஆனால், சட்டையில் பட்டன்கள் போடாவிட்டால் அவ்வளவு தான்... கடும் கோபத்துடன், 'பட்டனை போடு...' என, கடிந்து கொள்வார். பட்டன் இல்லாத சட்டை என்றால், முட்களால் குத்தி சரி செய்வார்.
அவரது அறிவுரைப்படி, ஒழுக்கத்துடன் கற்று, அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றேன்.
சொந்த ஊருக்கு திரும்பிய போது, அந்த ஆசிரியரை பார்க்க நேர்ந்தது. உடனே, 'சட்டையின் மேல் பட்டனை சரியாக போட்டிருக்கிறேனா' என, இடது கை அனிச்சயைாக சோதனை செய்தது. அதைக் கண்டவர், மனம் விட்டு சிரித்து பாராட்டினார்.
எனக்கு, 59 வயதாகிறது. அவரிடம் கற்ற நாட்களை, பொற்காலமாக கருதுகிறேன்.
- கோபால் வாத்யார் சங்கர நாராயணன், சென்னை.
