PUBLISHED ON : அக் 29, 2022

விருதுநகர், சஷத்திரியா வித்யாசாலா பள்ளியில், 1955ல், 10ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு!
பள்ளி கலையரங்கில் ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு கல்வி சம்பந்தப்பட்ட செய்திப்படம் மற்றும் கார்ட்டூன் திரைப்படங்களை, மாணவர்களுக்காக திரையிடுவர்; ஆர்வத்துடன் பார்ப்போம்.
அன்று கார்ட்டூன் படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்தடை ஏற்பட்டது. காட்சியில் தடங்கல் ஏற்பட்டதும் அவசரகால, சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது. சினிமா தியேட்டரில் விடும் இடைவேளை நேரம் என எண்ணியபடி, 'கடலை மிட்டாய்... முறுக்கு...' என, வேடிக்கையாக கத்தினேன். மாணவர்கள், 'கொல்' என சிரித்தனர்.
என்னை கண்டித்த வகுப்பு ஆசிரியர் செல்லையா, வெளியே போகச் சொன்னார். கலங்கியபடி சென்றேன்.
மறுநாள் வகுப்பில் தனியாக அழைத்து, 'உன் கடலை மிட்டாய், முறுக்கு நகைச்சுவையை அரங்கில் ரசித்தேன். பள்ளி நிகழ்ச்சியில், கண்ணியம் காக்க வேண்டியது கடமை என்பதால், வெளியே அனுப்பினேன்...' என தேற்றினார். அவரது ரசனை மற்றும் கடமை உணர்வை அறிந்து மனம் நெகிழ்ந்தேன்!
தற்போது, என் வயது, 81; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.மின்தடை ஏற்படும்போதெல்லாம், அந்த நிகழ்வை நினைத்துக் கொள்கிறேன்.
- ஜி.ராஜா, விருதுநகர்.
தொடர்புக்கு: 90477 15160
