PUBLISHED ON : டிச 03, 2022

பழங்காலத்திலிருந்தே, பேரிக்காய் மனிதர்கள் விரும்பும் உணவாக இருந்து வருகிறது. உடலுக்கு நன்மை செய்கிறது. நாகரிகம் பரவிய இடங்களில் எல்லாம், பேரிக்காய் உணவாக இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
'பைரஸ் கம்யூனஸ்' என்ற தாவர இனப்பிரிவைச் சேர்ந்தது பேரி. ஆப்பிளும் இதே இனத்தை சேர்ந்தது தான். கொஞ்சம் நீளமாக இருப்பதால், உருவத்தில் வேறுபடுகிறது பேரி.
மரம் உயரமாக அடர்ந்து வளரும்; அழகிய வெள்ளை மலர்கள் உடையது. மரத்தின் மேல் பட்டை, சிறு சிறு துண்டுகளாகப் பிளவு பட்டு, சாய்வு வரிசையில் அமைந்திருக்கும். இந்த மரத்தின் தனித்தன்மையாக இது கருதப்படுகிறது.
இதன் தாயகம் மேற்கு ஆசியா பகுதி; அங்கிருந்து மற்ற இடங்களுக்குப் பரவியது. பள்ளி ஆசிரியர் ஒருவரால் அமெரிக்காவுக்கு, கடந்த, 1797ல் எடுத்து செல்லப்பட்டது. அது, இன்றைய பார்லட் என்ற வில்லியம் வகை பேரிக்காய் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பாவில், பேரிக்காய் முக்கிய உணவாக பயன்படுகிறது. தமிழகத்தில், நீலகிரி, திண்டுக்கல், சேலம் போன்ற மாவட்ட மலைப்பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.
பேரிக்காயில், நார்ச்சத்து அதிகம். தின்றால் களைப்பை நீக்கி, தெம்பு, மன வலிமை தரும். இதில், 'கேடிசின்ஸ்' மற்றும், 'ப்ளாவனாய்டு' என்ற ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளன. இது, உணவு கொழுப்பு, வயிற்றில் சேராமல் தடுப்பதாக ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. ஐரோப்பிய நாடுகளில், பேரிக்காய் சாறில், மதுபானம் தயாரிக்கப்படுகிறது; இதை, 'ஹார்ட் சிடார்' என்கின்றனர்.
காட்டில் தானாக வளரும் பேரி மரங்களும் உண்டு; இதில் கிடைக்கும் பேரிக்காய் அடர் பச்சை நிற தோலுடன் கடினமாக இருக்கும். ஐரோப்பாவில் ஹேசல், பெர்டிலிடி, கான்பெரன்ஸ், வில்லியம்ஸ், பார்லெட் போன்ற ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.
சில மரங்களில், பேரிக்காய் தொங்கியபடி காய்க்கும்; சில வகை மரங்களில், காய்கள் நேர்க்குத்தாக, நிமிர்ந்த நிலையில் காய்க்கும்.
பழங்கள் பல உருவங்களில் கிடைக்கின்றன. அவை:
* குண்டு வகை - மிகப்பழைய ரகம்
* கூம்பு வடிவம் - முரட்டு தோலுடன், முக்கோண வடிவில் இருக்கும்
* பம்பரம் வகை - பம்பரம் போன்ற வடிவத்தில் இருக்கும்
* இடுப்புக்காய் - கூம்பு வடிவமாக வளைந்த இடுப்பு போல் காணப்படும்
* நீள்வட்டம் - நீண்ட உருளையான பழம்
* கலோபாஸ்சே - நீளமாக இருக்கும்; காய் பருவத்தில் உணவாக சமைத்து பயன்படுத்தலாம்.
இந்த மரம், விதை வழியாக சாகுபடி செய்யப்படுவதில்லை. ஆப்பிள் போல், குருத்துப் பதியன் முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் வளர்ந்த பேரி மரத்தை பிடுங்கி, வேரை நறுக்கி, நவீன தொழில்நுட்ப முறையில், பதியன் போட்டு செடிகளாக்கி, நடவு செய்யப்படுகிறது.
பொதுவாக, ஈரப்பதமிக்க நிலத்தில் நன்றாக வளரும்; மண் வளம் குறைந்திருந்தால், காய் சுவையற்றுக் கடினமாக இருக்கும்.
உடலில், உற்சாகம் பெருக, கிடைக்கும் போதெல்லாம் பேரியை விரும்பி உண்ணலாம்!
