PUBLISHED ON : ஜூன் 06, 2020

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் உள்ள பாரதிய வித்யா பவனில், 1978ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் தாத்தா, பாட்டி மிகுந்த அன்பு கொண்டவர்கள். பள்ளி முடிந்ததும் அவர்களுடன் பொழுதை செலவிடுவேன்; நடை பயிற்சிக்கும் அழைத்து செல்வேன். இதை, கவனித்துள்ளார் வகுப்பு ஆசிரியை.
ஒருநாள், 'நீ சிரவண் குமாரியா...' என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மறுநாள் வகுப்பறையில், 'நம்மிடையே ஒரு சிரவண் குமாரி இருக்கிறார் தெரியுமா...' என்று கேட்டார். யாரும் பதில் கூறவில்லை.
உடனே ராமாயணத்தில், பார்வையிழந்த பெற்றோரை, காவடியில் சுமந்து செல்லும் சிரவண் குமாரனின் கதையை கூறி, 'அதே மாதிரி, தினமும் தாத்தா, பாட்டியை பொறுப்புடன், கோவிலுக்கு அழைத்து செல்கிறாள் பிரியா; அவளை சிரவண் குமாரியாக பார்க்கிறேன்...' என்றார். அந்த கதை புகட்டிய நீதி, மனதில் பதிந்தது.
என் வயது 48; சமீபத்தில், பள்ளி சினேகிதியை சந்தித்த போது, 'சிவரண் குமாரி எப்படி இருக்க...' என்று விசாரித்தாள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
- பிரியா, சென்னை.
தொடர்புக்கு: 91600 13232
