PUBLISHED ON : ஏப் 02, 2022

புதுச்சேரி, வில்லியனுார், விவேகானந்தா அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 11ம் வகுப்பு படித்தேன்.
அன்று வகுப்பாசிரியர் ஆல்பர்ட் ரத்தினவேல் ஆங்கில பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
முதல் வரிசையில், நான்கு பேர் பேசியபடி இருந்தோம். எரிச்சலடைந்தவர், 'கூடுதல் கவனம் செலுத்தி, தேர்வுக்காக பாடம் நடத்துகிறேன். நீங்க கதையடிச்சிட்டு இருக்கீங்களே...' என கடிந்தார்.
சமாளிக்கும் வகையில், 'ஐயா... தேர்வை பற்றி தான் பேசிட்டு இருந்தோம்...' என்று கூறினோம். மனம் கனிந்தவர், 'இதோ... முதலில் இருக்கிறவரு அமைச்சராக போறாரு... மற்ற மூவரும் அரசு அதிகாரிகளா வருவாங்க...' என வாழ்த்தினார். கருத்து ஊன்றி படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறினோம்.
பின்னாளில் அதில் ஒருவர் ஆசிரியர் பணியேற்றார்; மற்றொருவர் சுய தொழில் செய்தார். நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
எனக்கு, 70 வயதாகிறது; அந்த ஆசிரியர் சொன்ன தீர்க்கதரிசனம் பல ஆண்டுகளுக்கு பின் பலித்தது.
அவர் சுட்டிக்காட்டிய படி, புதுவை அரசில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார் என் நண்பர் ஜெயக்குமார். இதை எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன்.
- வி.ஜெகனாதன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 93454 82680
