PUBLISHED ON : ஜன 04, 2020

கோவை மாவட்டம், மோட்டுப்பாளையம், தாசனுார் நடுநிலைப் பள்ளியில், 1968ல், 6ம் வகுப்பு படித்த போது, திக்கி திக்கி பேசுவேன்.
புதிதாக வந்த ஆசிரியர் கண்ணப்பன், முதல் நாள் வகுப்பில், மாணவ, மாணவியரின் சுய விவரங்களை, லேசாக திக்கியபடி விசாரித்தார்.
வகுப்பு முடிந்ததும், என்னை மட்டும் அழைத்து, 'நாளைக்கு, 20 குறளை மனப்பாடம் செய்து, மூன்று நிமிடத்தில் ஒப்பிக்கணும்; இல்லன்னா பிரம்பு தான் பேசும்...' என்றார்.
திக்கியபடியே பேசியதால், 'அவரை கிண்டல் செய்வதாக எண்ணி, தண்டனை கொடுக்கிறார்' என, பயந்தேன். இரவெல்லாம் படித்து, மறுநாள், நான்கரை நிமிடத்தில் திக்கித் திணறி ஒப்பித்தேன்.
மேலும், 20 குறளை மனப்பாடம் செய்து, ஒப்பிக்க கூறினார்; அவற்றை, மூன்றரை நிமிடத்தில் சொன்னேன். திக்கிப் பேசுவது வெகுவாக குறைந்திருந்தது.
நாலடியார், ஆத்திச்சூடி, இன்னா நாற்பது, திரிகடுகம் என்று, பழந்தமிழ் இலக்கியப் பாடல்களை ஒப்பிக்க, வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். இந்த பயிற்சியால், சரளமாய் பேச, படிக்க ஆரம்பித்தேன். திக்குவாய் மறைந்துவிட்டது.
ஆறு மாதத்திற்குப் பின், 'பார்த்தாயா... முறையாக பயிற்சி செய்தால், தடைகளை உடைக்கலாம். இளமையில் எனக்கு பயிற்சியளிக்க யாருமில்லை. உனக்கும் அந்த மாதிரி நிலை வரக் கூடாதென்று தான், தமிழ் பாக்களால் பயிற்சி அளித்தேன்...' என்றார். எனக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
தற்போது என் வயது, 62; இன்றும் அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைக்கிறேன்.
- சி.லிங்கம்மாள், கோவை.
தொடர்புக்கு: 97152 86288
