PUBLISHED ON : அக் 01, 2022
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே, புதுார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்தபோது, நடந்த சம்பவம்!
சரஸ்வதி பூஜைக்கு முந்தைய நாள், இறைவணக்க கூட்டம் நடக்குமிடத்தில் சரஸ்வதி தேவி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்திருந்தார், தலைமை ஆசிரியர் முத்தையா.
அதன் அருகே, வண்ண சாக்பீஸ்களால், பலவித கோலங்களை வரைந்தார் வகுப்பாசிரியை விஜயலட்சுமி. உதவிக்கு என்னையும் அழைத்திருந்தார்.
பூஜை முடிந்ததும் பிரசாதம் வழங்கப் பட்டது. தயங்கியபடி, 'விசேஷ நாட்களில் படையல் பொருட்களை இலையில் வைத்து, சாமி கும்பிடுறோமே... ஆனால், எந்த சாமியும் நேரில் வந்து சாப்பிடுவதில்லையே... சாமி சாப்பிட்டதாக எப்படி நம்புவது...' என கேட்டேன்.
புன்னகையுடன் என் கண்களை உற்றுப் பார்த்து, 'நீ பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை படித்து, உள்வாங்கினாலும், அதில் உள்ள எழுத்துக்கள் அழியாமலும், குறையாமலும் இருக்கிறதே... அதைபோல், படையல் பொருட்களை சாமி ஏற்று கொண்டாலும், இலையில் அப்படியே தான் இருக்கும்...' என நிதானமாக விளக்கினார். அது மனதில் ஆழமாக பதிந்தது.
எனக்கு, 49 வயதாகிறது. சாமிக்கு படையல் போடும்போதெல்லாம், அந்த ஆசிரியை கூறிய அறிவுரை மனதில் எதிரொலிக்கிறது.
- என்.வேலம்மாள், சென்னை.
தொடர்புக்கு: 85310 34646
