PUBLISHED ON : ஏப் 16, 2022

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சவுராஷ்டிரா பள்ளியில், 1970ல், 5ம் வகுப்பு படித்தபோது, வகுப்புக்கு மட்டம் போட்டு, பள்ளியின் பின்புறம் உள்ள கருப்பணசாமி கோவிலுக்குள் ஒளிந்து அமர்ந்து கொள்வேன். மாலை பள்ளி முடிந்து, மணி அடித்ததும், வீட்டிற்கு செல்வேன். இப்படியே இரு வாரம் கடந்தது.
அன்று, கணித ஆசிரியர் கணபதி கோவிலில் வழிபட வந்தார். என்னை கண்டதும், 'பெற்றோரை ஏமாற்றுவது சரியா... பள்ளிக்கு வராமல் மறைந்திருப்பது தெரிந்தால், மாணவர்கள் கேலி பேசுவர்... நாளையிலிருந்து தவறாமல் வகுப்புக்கு வா... பாடங்கள் புரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து கொள்...' என்று கூறினார்.
அவரது அன்பான அணுகுமுறை நம்பிக்கை ஊட்டியது; ஆறுதலை கொடுத்தது. பின், தவறாமல் வகுப்புக்கு சென்று கவனமுடன் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி., முடித்து கூட்டுறவு சங்கத்தில் வேலைக்கு சேர்ந்தேன். பணிகளில் உயர்ந்து மேலாளர் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன்.
எனக்கு, 62 வயதாகிறது; அன்று, நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசி, அறிவுறுத்திய அந்த ஆசிரியர் மீது மதிப்பு அதிகரித்துள்ளது.
- எம்.கே.ஜெனார்த்தனன், ராமநாதபுரம்.
