PUBLISHED ON : ஜூலை 02, 2010
சீனு ரொம்பக் குறும்புக்காரப் பையன். பிறரை ஏமாற்றி மகிழ்வதில் அலாதி குஷி. ஒருநாள் அவன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, ""புலி, புலி!'' என்று அலறினான். தூரத்தில் வயலில் வேலைசெய்து கொண்டிருப்பவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
அவர்கள் பதற்றத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் சீனு. வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
சில நாட்கள் சென்றதும் மறுபடி அதேபோல் செய்தான். மரத்தில் இளநீர் பறித்துக்கொண்டிருந்தவர்கள் அரக்கப்பரக்க ஓடிவந்தனர். ""ஏமாந்தீங்களா?'' என்று சொல்லி குலுங்கக் குலுங்கச் சிரித்தான்.
வந்தவர்கள் "சரி போகுது... சின்னந்பையன்!' என்று நினைத்து மன்னித்து விட்டனர்.
அடுத்த நாள் உண்மையிலேயே புலி ஆட்டுக்கிடைக்குள் புகுந்து கொண்டது. ஆடுகளை விட்டுவிட்டு அவனையே குறிபார்த்தது. கிலியுடன், ""ஐயோ! யாராவது உதவிக்கு வாங்களேன்! காப்பாத்துங்க!'' என அலறினான் சீனு.
ஆனால், வயலில் வேலை செய்தவர்கள், ""அந்தப் பையன் குறும்புக்காரன். நம்மளை ஏமாத்தக் கத்தறான்!'' என்று கூறிப் பேசாமலிருந்துவிட்டனர். ஆடுகள் நாலாபுறமும் ஓடித் தப்பிச்செல்ல, புலிக்கு இரையானான் சீனு.
குட்டீஸ்... மற்றவர்களை ஏமாற்றினால் நீங்களேதான் ஏமாந்து போவீங்க. சரியா?
