
குரும்பேரி என்ற ஊரில் வாழ்ந்து வந்தான் ராகுல். மிகவும் அறிவாளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தான். முடிந்த வரை வேலை செய்து, பெற்றோருக்கு உதவி வந்தான்.
மாலை வேளையில், பூங்கா செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். அங்குள்ள மரங்கள், செடி கொடிகள், பறவைகளை உற்று நோக்குவான். அவை வாழும் சூழலை கவனிப்பான்.
அவன் வித்தியாசமான நடத்தை கண்டு, 'பெரியவன் ஆனதும், என்ன செய்யப்போகிறாய்; எப்படிப்பட்ட வாழ்வை தேர்ந்தெடுப்பாய்...' என்று கேட்டனர் ஊர் மக்கள்.
மிகவும் நிதானமாக, 'மூளையை பயன்படுத்தி சிறப்பாக தொழில் செய்வேன்; எறும்பு, காகம் போல் சுறுசுறுப்பாக வாழ்வேன்...' என்று பதிலளித்தான் ராகுல்.
அதன்படி, மூளையை பயன்படுத்தி, சிந்தித்து வேலைகள் செய்து வந்தான். சம்பாதித்த பணத்தை சேமித்தான். நண்பர்களுக்கும் உதவி செய்தான்.
ஒருநாள் நண்பர்கள், 'சேமித்துள்ள பணத்தில் என்ன செய்ய போகிறாய்...' என்று கேட்டனர்.
'நிறுவனம் ஒன்றை உருவாக்குவேன்...' என்றான் ராகுல்.
அவன் செயல் மீது நம்பிக்கை வைத்து, பணம் திரட்டி உதவினர் நண்பர்கள்.
முதலில், வாங்க மறுத்தான் ராகுல். பின், அதை பயன்படுத்தி நிறுவனம் ஒன்றை துவங்கினான். பல நுாறு பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். கடின உழைப்பால் அந்த நிறுவனம் நல்ல லாபம் ஈட்டியது. சில நாட்களில், உலகம் போற்றும் பணக்காரன் ஆனான் ராகுல்.
அவனது அபார உயர்வு கண்டு, பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர்கள், 'முன்னேற என்ன செய்ய வேண்டும்...' என்று கேட்டனர்.
'எறும்பு போல் சுறுசுறுப்பாகவும், காகத்தை போல் பகிர்ந்து கொடுக்கும் பண்புடன் இருந்தால் போதுமானது...' என அனுபவ பூர்வமாக விளக்கினான் ராகுல்.
குழந்தைகளே... சுறுசுறுப்பும், பகிர்ந்து உண்ணும் மனப்பான்மையும் இருந்தால் வாழ்க்கையில் சுலபமாக முன்னேறலாம்!
- எம். தனவேல் பாண்டியன்

