சிறுகதை - நைல் நதி நாகரீகத்தின் முகத்துவாரம் ! - சாரதா விஸ்வநாதன்
சிறுகதை - நைல் நதி நாகரீகத்தின் முகத்துவாரம் ! - சாரதா விஸ்வநாதன்
PUBLISHED ON : ஜூலை 09, 2010

குட்டீஸ்! ஹப்பியை உங்களுக்குத் தெரியுமா? இவர் தான் நைல் நதியின் கடவுளாகக் கருதப்படுபவர். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெருகும் போது, மக்கள் ஒன்று கூடி ஹப்பி கடவுளுக்கு தங்கள் நாட்டின் வளத்தை அதிகரித்ததற்கு நன்றி கூறி மகிழ்வர்.
உலகிலேயே மிகவும் நீளமான நதி என்ற பெருமைக்குரிய நைல் நதியின் நீளம் 6670 கி.மீட்டராகும். "நைல்' என்ற பெயர் "நிலியோஸ்' என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது.
இந்த சொல்லுக்கு, "நதிப் பள்ளத்தாக்கு' என்று பொருளாகும். இந்த நைல் நதியின் பயணம், ஆப்பிரிக்காவின் பிரமாண்டமான விக்டோரியா ஏரியில் இருந்து தொடங்குகிறது.
எத்தியோப்பிய மலையில் இயற்கையிலேயே பாயும் ஏராளமான ஓடைகள் உள்ளன. இந்த ஓடையின் நீர் அனைத்தும், அடிவாரத்தில் இருக்கும் விக்டோரியா ஏரியில் வந்து கலக்குகின்றன. இதன் காரணமாக ஏரி நிரம்பி, அதன் வடக்கு விளிம்பில் ரிப்பன் நீர் வீழ்ச்சி என்னும் ஒரு குறுகிய அருவி வீழ்ந்து நதியாகப் பாய்கிறது. இதுவே நைல் நதி என்ற பெயருடன், தனது நெடுந்தூரப் பயணத்தை தொடங்குகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளில் பாய்ந்து, இறுதியில் மத்திய தரைக் கடலில் கலக்கிறது.
நைல் நதி உருவானவுடன், ஏராளமான மீன்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவை நதியையும், நதிக்கரையையும் தங்களின் வசிப்பிடங்களாகக் கொண்டன.
அப்போது அந்த பகுதியில் இருந்த எகிப்தியர்கள், ஈட்டிகளையும், வலைகளையும் கொண்டு நதியில் மீன் பிடித்து உணவாகக் கொண்டனர். கரையோரம் வாழ்ந்த பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடினர்.
விலங்குகளையும், மீன்களையும், பறவைகளையும் அள்ளித்தந்த நைல்நதிக் கரையோரத்திலேயே தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.
எத்தியோப்பிய மலைகளில் படர்ந்திருக்கும் பனி உருகுவதாலும், கோடை காலங்களில் மலைகளில் கடும் மழை பெய்வதாலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலிருந்து, செப்டம்பர் மாதம் வரை நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
வெள்ளமானது, நதியின் கரைகளை மீறி வெளிப்பாய்ந்து எகிப்தின் பாலைவனப் பகுதியை ஈரமாக்கும். வெள்ளப்பெருக்கு வடிந்தபின், நீர்பரவிய இடங்களில் கருப்பு நிறத்தில் வண்டல் மண் படியும். இந்த மண், பயிர் செய்வதற்கு மிகவும் உகந்தது.
இந்த வண்டல் மண்ணில் எகிப்தியர்கள், "பாபிரஸ்' என்ற நாணல் செடிகளை வளர்த்தனர். இதிலிருந்து காகிதம் மற்றும் வாசனை திரவியங்களை செய்தனர்.
விளைந்த பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மிக எளிதாக எடுத்துச் செல்ல தக்கதொரு போக்குவரத்து சாதனமாகவும், நைல் நதி எகிப்தியர்களுக்கு உபயோகமாக இருந்தது.
இப்படித்தான், உலகின் பழமையான எகிப்திய நாகரிகமானது, நைல்நதிக் கரையோரத்தில் உதித்தது. நைல் நதியின் குறுக்கில் கி.பி., 1960ல் இஸ்வான் அணைக்கட்டு கட்டப்பட்ட பிறகு, அதில் பருவ காலங்களில் பெருகி வரும் வெள்ள நீர் வீணாக்காமல் தடுக்கப்பட்டது.
நைல் நதியின் கடவுளாக கருதப்படுபவர் ஹப்பி. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெருகும்போது, மக்கள் ஒன்று கூடி ஹப்பி கடவுளுக்கு தங்கள் நாட்டின் வளத்தை அதிகரித்ததற்கு நன்றி கூறுகின்றனர்.
