PUBLISHED ON : ஜூன் 20, 2026

ஈரோடு மாவட்டம், பவானி நாட்டாண்மைக்கழக உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 11ம் வகுப்பு படித்தபோது, உதவி தலைமையாசிரியராக இருந்தார், ஜானகிராமன். நகைச்சுவையாக பேசி கவனத்தை ஈர்ப்பார். ஒவ்வொரு மாணவரின் பெயரையும் குறிப்பிட்டு இனிமை பொங்க கற்பிப்பார். பாகுபாடு காட்டமாட்டார்.
இந்த செயல்பாட்டை ஒரு கட்டுரையாக எழுதி, 'கண்ணன்' இதழுக்கு அனுப்பியிருந்தேன். அது, டிச., 15-, 1963 இதழில் பிரசுரமானது.
படித்து ரசித்தவர், 'பத்திரிகையில் உன் கட்டுரை வெளிவருவது தெரிந்திருந்தால், நல்ல புகைப்படம் ஒன்றை கொடுத்திருப்பேனே...' என மகிழ்ந்து பாராட்டியது, நெகிழ்ச்சி தந்தது.
அன்று, வாண்டுமாமா எழுதியிருந்த படக்கதையை தொகுத்து வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தேன். அதை வாங்கி கிழித்து எறிந்துவிட்டார், எழுத்தர் டேவிட். இதனால், துவண்டிருந்த என்னை அன்று மாலையே அழைத்து, நஷ்டஈடாக இரண்டு ரூபாய் தந்து சமாதானம் செய்தார், உதவி தலைமையாசிரியர்.
அறிவியல் வகுப்பில், ஆசிரியர் ஓ.கே.டி.தியாகராஜன் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் தடுமாறிய போது, 'உனக்கு கற்பனை செய்ய தான் தெரியும்...' என கேலியாக சிரித்தார். அதை அறிந்து அழைத்து தேற்றி நம்பிக்கையூட்டினார், உதவி தலைமையாசிரியர்.
இப்போது என் வயது, 79. தமிழக மின்வாரியத்தில் முதன்மை தலைமை வரைவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பள்ளி வாழ்க்கையில் மறக்க இயலாத அனுபவங்களை தந்ததுடன், இதழ்களில் எழுதும் ஆர்வத்தையும் வளர்த்த, உதவி தலைமையாசிரியர் ஜானகிராமனை போற்றுகிறேன்.
- க.ரவீந்திரன், ஈரோடு. தொடர்புக்கு: 99420 94042
