PUBLISHED ON : ஜூன் 20, 2026

சென்னை, அயனாவரம், ரயில்வே பாலபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2013ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தலைமையாசிரியராக இருந்த எஸ்.ராமலிங்கம் கணித பாடமும் நடத்தி வந்தார். கடினக் கணக்குகளை நேர்த்தியாக புரிய வைப்பார். ஒவ்வொரு எண்ணையும் அணுகும் வழிமுறை, கேள்வியை புரிந்து வரைபடம் தயாரிப்பதை சிரத்தையுடன் தெளிவுபடுத்துவார்.
மாணவர்களிடம் சகஜமாக பழகுவார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு அழைத்து சிறப்பு வகுப்பு நடத்தி முன்னேற உதவினார். கணிதத்தில் ஆர்வமற்றிருந்த எனக்கு, அவரது வழிகாட்டுதல் சிறப்பாக பயில உதவியது.
ஆசிரியர் பணியில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த அவர், 'பணியாற்றிய பள்ளிகளில் எல்லாம் பொதுதேர்வில் சிலரையாவது, முழுமையாக, 100 மதிப்பெண்கள் வாங்க வைத்திருக்கிறேன். இந்த பள்ளியில் அது இன்னும் நிறைவேறவில்லை...' என ஒருநாள் வருந்தினார். அந்த ஆண்டுடன் அவர் ஓய்வு பெறும் தகவல் தெரிய வந்தது.
கல்வி ஆண்டின் இறுதியில், தலைமையாசிரியரை மனதார வேண்டியபடி பொதுத்தேர்வை எழுதினேன். கணித தேர்வு சிறிது கடினமாக இருந்த போதும், 100 மதிப்பெண்கள் வாங்கி சாதித்தேன். அவரிடம் ஆசி பெற்றபோது மனக்குறை நீங்கியதை அறிந்து மகிழ்ந்தேன்.
எனக்கு 29 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். கற்பிப்பதில் புதிய உத்தியை புகுத்தி ஊக்கமளித்து தன்னம்பிக்கை வளர்த் த, தலைமையாசிரியர் எஸ்.ராமலிங்கத்தை போற்றி வாழ்கிறேன்.
- து.செல்வலட்சுமி, திருப்பூர்
