
எறும்பில் இலை வெட்டி என்ற இனம் ஒன்று உள்ளது. இது உலகின் முதல் விவசாயி என அழைக்கப்படுகிறது. வட, தென் அமெரிக்க கண்டப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது. குழுவாக வாழும் இதில் ராணி, ஆண் மற்றும் வேலைக்கார எறும்புகள் இருக்கின்றன.
முட்டையிட்டு சந்ததியை பெருக்குவது ராணி எறும்பின் முதன்மை வேலை. நாள் ஒன்றுக்கு, ஆயிரம் முட்டைகள் வரை இடும். இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது ஆண் எறும்பின் பணி. வேலைக்கார ஏறும்பு பெரிய உருவம் மற்றும் வலிய தாடையுடன் இருக்கும். இது வீரர் என அழைக்கப்படுகிறது. இதன் பணி, இலைகளை வெட்டி எடுத்து வந்து, புற்றில் சேர்ப்பது. தன்னை விட, 50 மடங்கு எடை உடைய இலையையும் சுமந்தபடி புற்றை நோக்கி வேகமாக திரும்பும். இலையை தாடையால் வெட்டி, நசுக்கி, உமிழ்நீரை பாய்ச்சும். இலைக்கூழாகி நொதிக்க ஆரம்பித்த சில நாட்களில் பூஞ்சை உருவாகும். அது எறும்புகளுக்கு உணவாக பயன்படுகிறது.
வேலைக்கார எறும்புகள், ராணியை கவனிப்பது, புழுக்களுக்கு உணவளிப்பது, கூட்டை சுத்தம் செய்வது, உணவு சேமிப்பது, எதிரிகளிடம் இருந்து புற்றைப் பாதுகாப்பது, புற்று கட்டுவது என பணிகள் செய்கின்றன. ஒரு புற்றில், 50 லட்சம் வரை வசிக்கின்றன. சூழலை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை கூட்டு முயற்சி, வேலைப் பகிர்வு, சுறுசுறுப்பு, விடாமுயற்சியை கடைபிடித்து உதாரணத்துவமாக வாழ்கின்றன.
- மு.நாவம்மா