தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (263)

இளஸ்... மனஸ்... (263)

இளஸ்... மனஸ்... (263)


PUBLISHED ON : ஆக 17, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா...

என் வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். ஒவ்வொரு முறை கடல் மீன் வாங்கி சாப்பிடும் போதும், என் தந்தை, 'இந்த மீன்களை பிடித்து, நமக்கு உணவாக்க ஒரு மீனவன் படும் சிரமங்கள் பற்றி உனக்கு தெரியுமா...' என கேட்பார்.

அதன் பொருள் புரியாமல், 'அப்படி என்ன சிரமங்கள் இருக்கின்றன...' என கேட்டால், என்னை முறைத்து பார்ப்பார். பின், 'நீயே படித்து, கேட்டு தெரிந்து கொள்...' என்று கூறி விட்டார். இது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சரியான விளக்கம் கூறுங்கள் ஆன்டி...

இப்படிக்கு,

- என்.ராஜ்குமார் பொன்னையா.



அன்பு மகனே...



கடலில் தொழில் செய்து வாழ்வதை பற்றி, -'கரை மேல் பிறக்க வைத்தான்... எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்...' என்ற பாடல், படகோட்டி படத்தில் இடம் பெற்றுள்ளது. இது மிகவும் சோகம் நிறைந்தது. பண்டை காலத்தில் இருந்தே, கடலோரம் வாழும் மக்கள், கடலில் மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்தியாவில், 2 கோடி மீனவர்கள் உள்ளதாக புள்ளி விபரம் உள்ளது. ஒவ்வொருவரும், தனியாகவோ, கூட்டாகவோ கடலுக்கு சென்று மீன் பிடித்து விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். நாட்டில் 3,000 கி.மீ., நீள கடல் பகுதி உள்ளது.

இந்தியாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆறு, குளங்கள் உள்ளன. அவற்றிலும் மின்பிடிக்கும் தொழில் நடக்கிறது.

கர்நாடகாவில் மீனவர்களை, 'பெஸ்தா' என அழைக்கின்றனர். மும்பையில், 'கோலி' என்கின்றனர். குஜராத்தில், 'மச்சியார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுச்சேரியில், 'செம்படவர்' என்பர். ராஜஸ்தானில், 'கீலாட்' எனவும், மேற்கு வங்கத்தில், 'ஜாலோமாலோ' எனவும், ஒடிசா மாநிலத்தில், 'ராஜ்பன்சி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில், பரதவர், முக்குவர் என பெயரிட்டு அழைக்கப்படுகின்றனர்.

தமிழக மீனவர்களில் பலர், கி.பி., 1600ம் ஆண்டுகளில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவராக மாறி விட்டனர். மீனவர்கள் பெரும்பாலும், கடல் உணவுகளையே உண்கின்றனர். லுங்கி, சட்டை போன்ற உடைகளை அணிகின்றனர்.

இந்த இனத்தவரின் கல்வியறிவு, 1980ல், 19.85 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில், 66.07 சதவீதமாக உயர்ந்துள்ளது.

படகு இல்லாத மீனவருக்கும், மீன் பிடிப்பில், சமபங்கு கிடைப்பதால், விவசாயக் கூலித் தொழிலாளர்களை விட, சற்று மேம்பட்டு வாழ்கின்றனர் மீனவர்கள். இவர்களின் கலாசாரம், சமூக ரீதியாக நாட்டில் வாழும் பிற சமூகத்தினரிடம் இருந்து சற்று வேறுபட்டுள்ளது.

கடற்கரையில் படுத்து, கடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, எப்போது கடலுக்குள் இறங்கினால், மீன் அதிகம் கிடைக்கும் என அவதானித்து எந்நேரமாக இருந்தாலும், கடலுக்குள் மீன் பிடிக்க கிளம்பி விடுகின்றனர். எந்த ஆபத்தையும் பொருட்படுத்துவதில்லை.

மீனவர்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது; மனம் முழுக்க வலியால் நிரம்பியுள்ளது. புயல் பற்றியோ வானிலை மாற்றம் பற்றியோ எவ்வித கவலையும் படாமல் உழைக்கின்றனர்; மீன் பிடிக்க கடலுக்குள் செல்கின்றனர். கடல் எல்லை தெரியாததால், எல்லை தாண்டி மீன் பிடித்து, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்கி, சிறைப்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல், ஜூன் 14 வரை, தமிழக கடற்கரையில் மீன்பிடிக்க தடை காலம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த, 61 நாட்களுக்கும் மீனவர்களுக்கு நிவாரணமாக, 8,000 ரூபாய் வழங்குகிறது தமிழக அரசு.

கடலில் ஒரு மாதம் தங்கியிருந்து, மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் விசை படகுகளும் உள்ளன. அவற்றின் மதிப்பு, கோடி ரூபாய்க்கும் அதிகம். அவற்றில், எதிரொலி உருளை, ராடார், உலக இடநிலை உணர்வி எனப்படும் ஜி.பி.எஸ்., போன்ற தொழில்நுட்ப வசதிகள் உண்டு. தொழிலுக்கு இது பாதுகாப்பு தருகிறது.

இதை படிக்கும் போதே மீன்பிடித் தொழில் எத்தனை சிரமமானது என்பதை அறிந்திருப்பாய். இனி, அங்காடியில் மீன் வாங்கும் போது, பேரம் பேசி, பணத்தை மிச்சம் பிடிக்க பார்க்காதே. மீனவர்களின் உழைப்பை புரிந்து கொள்.

- -அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us