
அன்புள்ள அம்மா...
என் வயது, 30; தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண். எனக்கு, 4 வயதில் மகன் இருக்கிறான். அவனிடம் ஒரு கெட்ட குணம் இருக்கிறது.
ஜன்னல் கம்பியை பிடித்து ஏறி எட்டடி உயரமுள்ள பீரோவில் உட்காருகிறான். பால்கனி கம்பி மீது ஏறி உட்காருகிறான். மாடிப் படி கைபிடி சுவரில் சறுக்கி விளையாடுகிறான்.
இருசக்கர வாகன பில்லியனில் ஏறி நிற்கிறான். இவற்றை செய்யாதே என அதட்டினால் சிரித்தபடி ஓடி விடுகிறான். என்ன செய்து இந்த சர்க்கஸ் வேலைகளை நிறுத்தலாம். சரியான ஆலோசனை சொல்லுங்கள். அவன் செயல்கள் எனக்கு கலக்கம் தருகின்றன.
இப்படிக்கு,
ஆர்.பாண்டியம்மாள்.
அன்பு சகோதரிக்கு,
ஒரு மனிதனுக்கு நெருப்பு, பாம்பு, உயரம் பற்றி இயற்கையாகவே பயம் உண்டு.
இவற்றில் இருந்து உயிர் பிழைக்கும் உள்ளுணர்வு மரபியல் ரீதியாகவே ஒவ்வொருவருக்கும் தொடரும்.
பயம் தப்பித்தலுக்கான அடிப்படை.
வலி என்ற உணர்வு இல்லாவிட்டால் மனித இனம் இந்த உலகில் தொடராது.
உன் நான்கு வயது குழந்தை பீரோ ஏறுவது, பால்கனி சுவர் ஏறுவது, பாசிட்டிவ்வான விஷயமே.
உயரம் ஏறுவதால்...
உடல் திறனும், தன்னம்பிக்கையும் மேம்படும்
உடல், மனவளர்ச்சி கூடும்
உடல் இயக்கதிறன், சமநிலை, ஒருங்கிணைப்பு, பலம் அதிகரிக்கும்
பிரச்னைகளை தீர்க்கும் திறமை உண்டாகும்
தனிமனித சுதந்திரம் உருவாகும்
பாதுகாப்பாக சவால்களை ஏற்கும் மனோபாவம் வளரும்
ஐம்புலன்கள் வீரியம் பெறும்
இதய ஆரோக்கிய பயிற்சி கிட்டும்.
உயரம் ஏறுதல் உலகத்தை ஆராயவும், உடலை ஆராயவும் ஒரு வழியாக இருக்கிறது.
உயரம் ஏறுதல் உயிர் ஆபத்தை விளைவிக்கும் என தெரிகிறது என்றால், அவனிடம் நேரடியாக, 'நோ' சொல்லாதே-. அதற்கு பதிலாக அவன் கவனத்தை திசை திருப்பி- மடைமாற்றம் செய். பாதுகாப்பான புது பணியை அவனிடம் கொடு.
மகனிடம், உயரத்திலிருந்து விழுந்தால் மரணக்காயம் ஏற்படும் என்பதை கூறி எச்சரிக்கவும். பாதுகாப்பு முதன்மையானது என்பதை உணர்த்தவும். வயதுக்கேற்ப சவாலை மேற்கொள்ள அவனை அறிவுறுத்தவும்.
வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் தவிர்க்க வேண்டிய அபாயகரமான விஷயங்களை உன் மகனிடம் பட்டியலிட்டு மென்மையாக உரைக்கவும்.
உன் மகன் சோர்வாக, பசியாக, அதீத உற்சாகமாக, விரக்தியாக, சலிப்பாக இருந்தால் எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுவிக்கவும்.
உன் மகனின் உயரம் ஏறும் சாகசத்தில் நீ கவனிக்க வேண்டியது இரு முக்கியமான விஷயங்கள்...
அவன் விளையாட்டுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழல் உள்ளதா என்பதை கணிக்க வேண்டும்.
அவன் ஒவ்வொரு நடவடிக்கையின் மீதும் நொடிக்கு நொடி கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
உன் மகனுக்கு அதிவேக நடத்தை பண்பு மற்றும் மதியிறுக்கம் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். அதற்கு குழந்தைகள் நல மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெறு. எதிர்காலத்தில் உன் மகன் மலையேறும் சாகசகாரன் ஆவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. அதுபோன்று சாகசங்கள் புரிய என் வாழ்த்துகள்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

