PUBLISHED ON : நவ 30, 2024

கடலுார் மாவட்டம், சிதம்பரம், ராமசாமி செட்டியார் டவுன் உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் டி.வரதராஜன். அன்புடன், 'டிவி' என அவரை அழைப்போம். வகுப்பறையில் சரஸ்வதி படம் ஒன்றை மாட்டியிருந்தார். ஒவ்வொரு வெள்ளியன்றும், அதற்கு சிறப்பு செய்ய மாணவர்களிடம், ஐந்து காசு வசூலிக்கும் பொறுப்பு தந்திருந்தார்.
வசூல் தொகையில், படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போடுவேன்; நறுமண ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து ஏற்றுவேன். அதன் வாசனை, 45 நிமிடம் வரை கமழ்ந்திருக்கும். இந்த செலவு போக, மீதி தொகையை பயன்படுத்தி ஆண்டு இறுதியில், 'கிளாஸ் டே' கொண்டாடுவோம்.
அன்று, மற்ற ஆசிரியர்கள், ஊழியர்களை கவுரவித்து நல்லொழுக்கம், முதியோர், மாற்றுத்திறனாளிகளை மதிப்பது உட்பட, நற்பழக்க வழக்கங்களை அறிவுறுத்துவார் வகுப்பாசிரியர். அவரிடம் படித்தோர் பிரத்யேகமாக தெரிவதால் விரும்பி போற்றுவர் பெற்றோர்.
தற்போது என் வயது, 72; நிதி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த ஆசிரியர் நினைவாக என் குடும்ப சிறுவர், சிறுமியருக்கு நற்பழக்கங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு ஊட்டி வருகிறேன்.
- என்.சுப்ரமணியன், சென்னை.
தொடர்புக்கு: 80159 84584
