தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (11)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (11)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (11)


PUBLISHED ON : அக் 12, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டு கற்பனையில் சஞ்சரித்து வந்தான் மகிழ். அவன் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்ப்பை மீறி குழந்தைகள், அந்த நாயுடன் நெருக்கம் காட்டினர். அது, குடியிருப்பின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்தது. அன்று, எங்கிருந்தோ ரத்தம் தோய்ந்த வாயுடன் பாய்ந்து ஓடி வந்தது. இனி -



செங்கிஸ்கான், குடியிருப்பு செயலரை கடித்து, காயப்படுத்தி விட்டதாக எண்ணினான் மகிழ்.

மிகுந்த ஆவேசத்துடன், ''செயலர் மோசம்; ஆனால், பழிக்கு பழி வாங்க கடிக்கலாமா... அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையோ... ஆம்புலன்சில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் எங்கே...'' என்று வீறிட்டான்.

'அடேய்... அவசர கொழுக்கட்டை. நான், என்ன செய்திருக்கிறேன் என்பதை வந்து பார்...'

சமிக்ஞை மொழியில் பேசி அழைத்தது. அவனை இழுத்தபடி ஓடியது செங்கிஸ்கான்.

அடுக்குமாடி குடியிருப்பில் பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் திறந்து கிடந்தது.

உள்ளே ஆறடி நீளமுள்ள பாம்பு, துண்டு துண்டாக, காயம் பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

சற்று தள்ளி, 15 இளம் பாம்புகள் நெளிந்தன.

''ஐயோ... நல்ல பாம்பை தான் கடித்துள்ளாயா... அது தெரியாமல், உன்னை திட்டி விட்டேன்...''

அச்சமயம், ஓடி வந்தார் செயலர்.

''பா... பா... பாம்பு...''

''செயலரே... ஸ்டோர் ரூம் கதவு ஏன் திறந்து கிடக்கு...''

''யாரோ கள்ளத்தனமாக திறந்துள்ளனர்...''

''திறந்தது கூட நல்லதா போச்சு... இந்த இளம் பாம்புகள் பெரிதாகி வீட்டுக்குள் புகுந்து, குழந்தைகள், பெரியவர்களை கடித்து இருந்தால்... செங்கிஸ்கான் தான் நம்மை எல்லாரையும் காப்பாத்தி உள்ளது...''

''இப்போது நாம் என்ன செய்யணும்...''

''பாம்புகளை கொல்வதை வன விலங்கு பாதுகாப்பு சட்டம் தடுக்கிறது. தாய் பாம்பு காயம் பட்டு கிடக்கிறது. உடனே, வனத்துறையை அழைத்தால், எல்லாவற்றையும் பாதுகாக்கலாம்; வனத்துறை பொறுப்பில் விடுவோம். அவர்களை அழைக்கலாம்...''

அச்சமயம், குறுக்கிட்டார் அடுக்குமாடி குடியிருப்பு வாசி ஒருவர்.

''தாய் பாம்பு காயம் பட்டு கிடக்கிறது. அது காயம் பட்ட இடத்தை கழுவி, சுத்தம் செய்வது நலம்...''

அலைபேசியில், 10 இலக்க எண்ணை அமுக்கி தகவல் தெரிவித்தார் செயலர்.

அடுத்த சில நிமிடங்களில் வனத்துறை வாகனம் வந்து நின்றது.

தாய் பாம்பு காயம் பட்டு தப்பித்து ஓட முடியாமல் அப்படியே கிடந்தது. அதற்கு முதல் உதவி கொடுத்தனர் வன விலங்கு நல ஊழியர்கள்.

பின், குட்டிகளை எல்லாம் பிடித்தனர்.

''மீண்டும் பாம்புகளை பார்த்தால், தீயணைப்பு படை, 101 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்லுங்கள். பாம்பு பிடிப்பது அவர்கள் வேலை இல்லை என்றாலும் பிடித்து எங்களிடம் ஒப்படைப்பர்...''

'சரி...' என்றனர் குடியிருப்பு வாசிகள்.

வனத்துறைக்கு சொந்தமான வாகனம் புறப்பட்டது.

செங்கிஸ்கானை கட்டியணைத்து முத்தமிட்டான் மகிழ்.

''நீ, இங்கு வந்து, சில நாட்கள் தான் ஆகின்றன. அதற்குள், அடுக்குமாடி குடியிருப்பின் காவல் தெய்வம் ஆகி விட்டாய் செங்கிஸ்கான்...''

'புகழாதே... குற்றங்கள், ஆபத்துகளை கண்டுபிடிப்பது தான் என் சுபாவம்...'

சமிஞ்ஞையில் உரைத்தது செங்கிஸ்கான்.

அங்கு நின்ற அடுக்குமாடி குடியிருப்பு வாசி ஒருவர், ஒரு லிட்டர் பாலை எடுத்து வந்தார்.

''பாம்புகளை கண்டுபிடித்த செங்கிஸ்கானுக்கு என் சிறு பரிசு...'' என்றார்.

''நாய்களுக்கு பொதுவாக, 'லேக்டோஜன்' அலர்ஜி உண்டு. பாலை குடித்தால், அவற்றுக்கு வயிற்று போக்கு ஏற்படும். வாந்தி, பசியின்மை, வாய்வு தொல்லை, வயிறு வீக்கம் ஏற்படும். உங்கள் அன்பை காட்ட செங்கிஸ்கானை தடவிக் கொடுத்து முத்தமிடுங்கள். அது போதும்...'' என்றான் மகிழ்.

''அப்படியா விஷயம். எனக்கு இது தெரியாதே...'' என கூறி, பாலை திருப்பி எடுத்து சென்றார்.

இரு அடுக்குமாடி குடியிருப்புகளை பிரிக்கும் சுவர் மீது, ஒரு பூனை நின்றிருந்தது.

செங்கிஸ்கானை பார்த்து, 'மியாவ்... மியாவ்...' என கராவியது.

சாதாரணமாக இருந்த செங்கிஸ்கான் முழு உடலும் விடைத்தது.

ஆங்காரமாக முறைத்து குரைத்தது.

''ஏய்... அமைதியாக இருங்கள்...'' என்றான் மகிழ்.

பூனை சுவற்றில் இருந்து குதித்தது.

செங்கிஸ்கான் பூனை மீது பாய்ந்தது;

இரண்டுக்கும் நேருக்கு நேர் உக்கிர போர் மூண்டது.

ஸ்தம்பித்து நின்றான் மகிழ்.

'என்ன தான் இருந்தாலும், செங்கிஸ்கான் ஒரு நாய் என்பதை நிரூபித்து விட்டதே... அது, பூனையை கடித்து குதறப் போவதை யாராலும் தடுக்க முடியாது' என எண்ணி, இரு கைகளையும், தலையில் வைத்து, கண்களை இறுக மூடிக் கொண்டான் மகிழ்.



- தொடரும்...

ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us